ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7
Showing posts with label தேவவார்த்தை. Show all posts
Showing posts with label தேவவார்த்தை. Show all posts

Tuesday, 1 April 2014

யோசேப்பு கனிதரும் செடி - இம்மாத நற்செய்தி


ஒரு உழவன் தன் நிலத்தை பயிரிட்டு, நீர்ப்பாய்ச்சி, ஏற்ற காலத்தில் அறுப்பது போல இயேசுவும் மண்ணால் உண்டாக்கப்பட்ட‌ நம்மை பயன்படுத்துகிறார். அவரது சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, மண்ணான நம்மை பயன்படுத்துவார், நம் நிலம் விதைக்கப்படும், தண்ணீர் பாய்ச்சப்படும், விதை முளைத்து மரமாகி பூத்துக் குலுங்கும், காய்த்து கனி கொடுக்கும்... கர்த்தரின் கரத்தில் தன் வாழ்வை ஒப்புக்கொடுக்கும் எந்த மனிதனும் ஏற்றுக் காலத்தில் கனிதந்து இலை உதிராமல் இருக்கிற மரத்தை போலிருப்பான். அத்தகைய மனிதர்களுள் ஒருவர் தான் யோசேப்பு. "யோசேப்பு கனிதரும் செடி" என கர்த்தரே அவரைக் குறித்து நற்சாட்சி கொடுத்தார். யோசேப்புக்கு கிருபையளித்த தேவன் உங்களை கைவிடுவாரா? நிச்சயமாக இல்லை. கனி தருகிற மரமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான், உங்கள் நிலத்தை அவரது கரத்தில் ஒப்புக் கொடுங்கள். நீங்களும் கனி தருவீர்கள். இதனைக் குறித்து பரிசுத்த வேதம் கூறுகின்ற சத்தியங்களைக் காணலாம்...

வேதவசனமே விதை...

இயேசு கிறிஸ்துவின் கரங்களில் நீங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டிய நிலம் உங்கள் இருதயமே. நம்மிடம் அவர் விரும்பும் ஒரே காரியம் அது மட்டும் தான். நம் பொன்னையோ, பொருளையோ விரும்புகிற தேவன் இயேசு கிறிஸ்து அல்ல‌. மாறாக நம்மையும் நம் இதயமென்னும் நிலத்தில் ஒரு சிறிய இடத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கும் தெய்வம் அவர். நீங்கள் அவருக்கு இடமளிப்பீர்களா? நம் மனதில் இயேசுவுக்கு இடமளிக்கும் போது, அவர் அதில் பிரவேசிக்கிறார், தன் வார்த்தைகளாகிய விதைகளை நம் மனதில் விதைக்கிறார். அந்த விதைகள் எல்லாம் ஜீவனுள்ள வார்த்தைகள். எந்த மனிதனையும் பரலோகத்தில் பிரவேசிக்க செய்யும் சத்திய வார்த்தைகள் அவை. அந்த விதைகள் நம் நிலத்தில் விதைக்கப்படுவது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமே. இதனைக் குறித்து வேதம் அழகாய்ச் சொல்கிறது.

அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டு இருக்கிறீர்களே - 1 பேதுரு 1:23

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவரது வார்த்தைகளை கேட்டறிவதோடு நம் பங்கு முடிந்து விட்டதா? நிச்சயமாக இல்லை. எப்படி விதையானது நிலத்தில் விதைக்கப்பட்டவுன் நீர்ப்பாய்ச்சப்படுகிறதோ அது போலவே நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகளுக்கும் நீர்பாய்ச்ச வேண்டும்...

விசுவாசமே நீர்ப்பாய்ச்சும் நதி...

"என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" - யோவான் 7:38

தன்மேல் விசுவாசமாய் உள்ளவன் எவனோ அவன் உள்ளத்தில் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும் என்றார் இயேசு. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...! நிச்சயமாக விசுவாசமில்லாத எந்த மனிதனாலும் தேவ வார்த்தைகளை தன் மனதில் காத்துக் கொள்ள முடியாது. எனவே, நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகள் செழித்து வளர அவைகளை நாம் மனப்பூர்வமாக விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நம் மனதில் உள்ள ஊற்றுகள் திறக்கப்பட்டு ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும். அதுவே கர்த்தர் உங்கள் மனதில் விதைத்த விதைகளுக்கு நீங்கள் பாய்ச்சுக்கின்ற தண்ணீர்...! நீங்கள் விசுவாசிப்பீர்களா? நாம் விசுவாசிக்கும் போது தான் அவரது வார்த்தைகள் நீர்ப்பெற்று நமக்குள் முளைக்கும், வேறூன்ற ஆரம்பிக்கும்...

அறுப்புக்கு ஒரு காலமுண்டு...

"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு....நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு" - பிரசங்கி 3:1,2

துளிர்விட்ட விதைகள் செழித்து மரமாக காலம் பிடிப்பது போல நாம் கனிதர நமக்கும் ஒரு காலம் வைக்கப்பட்டுள்ளது. அந்த காலமே உங்களை திடப்படுத்தி புடமிட தேவன் தெரிந்து கொண்ட காலம். எப்படி விதைக்கப்பட்ட விதை திடமான மரமாகும் முன் வசந்தம், மழை, வெயில், குளிர் என பல காலங்களை கடந்து வருகிறதோ, அவ்வாறே நாமும் கனிதரும் முன் பல இன்ப துன்பங்களை கடந்து வர வேண்டும். இந்த காலத்தில் மனம் சோர்ந்த மனிதன் எவனும் வார்த்தையை விட்டு விலகுகிறான். விசுவாசத்தைக் காத்துக் கொண்டவனோ நிலைத்து வளர்கிறான்.

உஷ்ண காலம் வருகிற போது, தண்ணீர் பாய்ச்சப்படாத விதைகள் எல்லாம் கருகி போகும், தண்ணீர் பாய்ச்சப்பட்ட விதைகளோ உஷ்ணத்தைத் தாக்குப்பிடித்து வளரும். அப்படியே மனிதனும் தனக்கு இன்னல் துன்பங்கள் ஏற்படும் போது ஜீவத்தண்ணீராகிய தன் விசுவாசத்தைக் காத்துக் கொள்வது அவசியம். விசுவாசம் நம் மனதில் மறையும் போது, ஜீவநதி நின்றுபோகும், நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகளாகிய விதைகள் எல்லாம் கருகிப்போகும். இத்தகைய உள்ளங்களை கற்பாறையோடு கர்த்தர் ஒப்பிடுகிறார். கல்நெஞ்சம் கொண்ட மனிதன், உபத்திரவங்கள் ஏற்பட்ட உடனே கர்த்தர் மேல் கொண்ட விசுவாசத்தை உதறித் தள்ளுகிறான். உஷ்ணத்தை தாங்க விதைக்கு எவ்வாறு தண்ணீர் வேண்டுமோ, அப்படியே நமக்கும் வார்த்தையை காக்க விசுவாசம் வேண்டும். எனவே எக்காலத்திலும் உங்களுக்குள் உள்ள விசுவாசத்தை விடாதீர்கள். இதனைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கூறும் இரு பகுதிகளைப் இப்போது காணலாம்.

உஷ்ணத்தில் கருகிப் போன விதைகள்...
"வெயில் ஏறின போதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டும், தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியால், கொஞ்சக் கால மாத்திரம் நிலைத்து இருக்கிறார்கள், வசனத்தின் நிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறல் அடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்" - மாற்கு 4:6,16,17

ஜீவத்தண்ணீரால் காக்கப்பட்ட விதைகள்...
"கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீர் அண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்" - எரேமியா 17:7,8

இவ்வாறே நம்மில் கர்த்தர் தன் வார்த்தையை விதைக்கிறார்... நம் இதயமே நிலம், அவர் வார்த்தையே விதை, நம் விசுவாசுமே ஜீவத்தண்ணீர், இன்னல் துன்பங்களே வெயிற் காலம். வெயிற் காலத்தில், விதைகளுக்கு நீர்பாய்ச்சினால் அவை செழித்து வளரும், தப்பாமல் கனிக் கொடுக்கும் நல்ல மரமாகும். எந்த மனிதனையும் பரிசுத்தமாக்கும் நற்பண்புகளே அதன் கனிகள்...

கலாத்தியர் 5:22,23 "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்..."

தேவன் நம் எல்லாரிலும் விதைக்க விரும்புகிறார். விதைக்கப்பட்ட விதைகளை நாம் காத்துக் கொள்ளும் போது கனிக் கொடுப்போம். யோசேப்பு மட்டுமல்ல, விதைகளைக் காத்துக் கொண்ட எவனும் கனிதரும் செடி ஆவான். நமக்கு ஏற்படும் வெயிற்காலம் யோசேப்புக்கு நேரிடாமல் அல்ல. நிலம், விதை, நீர், வெயில், கனி என எல்லா காரியங்களையும் கடந்து வந்தவர் தான் யோசேப்பு. அடிமையாய் விற்கப்பட்டவர், இறந்தவனாக எண்ணி மறக்கப்பட்டவர்... வீண்பழி சுமந்தார், சிறைசென்று தீங்கு அனுபவித்தார், நன்றி மறக்கப்பட்டார். பதினைந்து ஆண்டுகளாய் வெயிற்காலத்தை மட்டுமே கண்டவர் யோசேப்பு. ஆனால் எப்படி கனி கொடுத்தார்? ஜீவத்தண்ணீராகிய விசுவாசம் அவரில் இருந்தது.

இந்த காலமே அவரை புடமிட தேவன் தெரிந்துகொண்ட காலம். வெயில் ஓய்ந்த பின், அவரில் அன்பும் தயவும் சாந்தமும் சமாதனமும் நிலைபெற்று இருந்தன, தனக்கு துரோகம் இழைத்தவர்களையும் அரவணைத்துக் கொண்டார்... நீடியபொறுமையும் விசுவாசமும் இருந்தன, இறுதி வேளை முடிய கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தார்... நற்பண்பும் இச்சையடக்கமும் இருந்தன, வேசித்தனத்தை விட்டு விலகி ஓடினார்... சந்தோஷம் இருந்தது, பார்வோனுக்கும் எகிப்து தேசத்திற்கும் பிரதானியாய் இருந்தார், தன்னை தேடி வந்தவர்களுக்கெல்லாம் விதைகளை அள்ளி அள்ளி கொடுத்தார்...!

யோசேப்பு கர்த்தருக்கு கனிதரும் செடி! நீங்கள் கனிகொடுப்பீர்களா...?

Sunday, 16 March 2014

உன்னைச் சொந்தங் கொண்டாடும் உன்னதர்...


நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் இல்லை என்றே சொல்லலாம். பரிசுத்த வேதாகமத்தை மனதார விசுவாசித்து படிக்கும் போது இயேசுவின் அன்பிலிருந்து நம்மால் தப்ப முடியாது. தன் தூய அன்பால், வேத வார்த்தைகளால் நம் மனதாய் எளிதாய் கொள்ளையிட்டு விடுவார். இது எப்படி சாத்தியமாகிறது? ஏன் கிறிஸ்துவுக்குள் வந்தவன் தேவனை அதிகமாக உரிமை பாராட்டுகிறான்? தன் தேவனை "அப்பா பிதாவே" என்று அன்போடு அழைத்து, நேசித்து மகிழ அவனால் எப்படி முடிகிறது? ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

ஏனெனில் இயேசு கிறிஸ்து நமக்காக அந்தளவு அன்பும் பரிவும் கொண்டிருக்கிறார். வேதம் சொல்வது போல, நாம் அவரை முதலாய் நேசிக்கவில்லை, அவர் நம்மை முதலாய் நேசித்து நமக்காய் அவரை ஒப்புக் கொடுத்தபடியினால் நாம் இவ்வாறு தேவ அன்பில் தத்தளித்து மகிழ்கிறோம். இயேசு கிறிஸ்து காட்டிய பாதை பிற வழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தேவனை நமக்கு எல்லாரும் எஜமானனாக, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அதிபதியாக சித்தரிப்பதை விட ஒரு நல்ல தாயாக, நல்ல தந்தையாக, நல்ல சகோதரனாக, ஆத்ம நேசராக, உயிர்த் தோழனாக பரிசுத்த வேதம் சித்தரிக்கிறது. இவ்வாறு நம்மை மகனாக, மகளாக, மணப்பெண்ணாக, தோழனாக அழைத்து மகிழும் தேவன் இயேசு கிறிஸ்துவை அன்றி வேறு யாருண்டு?

நம்மை ஒரு வேலையாளாக, தன் கரத்தின் சிருஷ்டியாக, தன் மனம் விரும்பும் காரியத்தை மட்டும் செய்ய பயன்படுத்தும் ஒரு அடிமையாக அவர் எண்ணாமல், நம்மை அவரது அன்பிற்கு முழு தகுதியுடையவர்களாக‌ காண்கிறார். அதன் காரணமாகத் தான், "தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்", "மார்போடு அணைப்பார்", "கரத்தை பிடித்து வழிநடத்துவார்", "முத்தமிடுவார்" என பல அன்புமிகுந்த வார்த்தைகளை வேதம் கூறுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இத்தகைய பாசப் பரிமாறுதல்களை வேறெந்த நூல்களிலும் காண முடியாது. எனவே ஒரு எஜமானிடம் ஒரு அடிமை கரமேந்தி நிற்பது போல, வெறும் கட்டளையை ஏற்று நடக்கும் ஒரு வேலைக்காரனாக நாம் தேவனிடத்தில் செல்லத் தேவையில்லை. "அப்பா பிதாவே" என்று அழைக்கும் உரிமையோடு, அன்போடு அவரிடத்தில் ஜெபித்து மகிழலாம், அனுதினமும் அவரது பிரசன்னத்தில் ஆனந்தமாக நம் வாழ்க்கையை நடத்தலாம். இத்தகைய சந்தோஷத்தை உரிமையை நமக்கு ஈந்தவர் இயேசு கிறிஸ்து மட்டுமே...

வேதம் கூறும் இன்னொரு அழகிய செய்தி இதுதான். மனிதன் தேவனை நேசிக்காவிட்டாலும், கர்த்தர் அவனை நேசிப்பதை விடுவதில்லை. மனிதன் பாவம் செய்து அவரது சமூகத்தில் இருந்து விலகி மறைந்து கொண்டாலும், தேவன் அவனை தேடிக் கொண்டு கவலையோடு அலைந்து திரிகிறார். ஆதாம் பாவமிழைத்து கர்த்தரின் கண்களில் இருந்து மரங்களுக்குள் ஒளிந்தாலும் தேவன் அவனை சத்தமிட்டு அழைத்து கொண்டு தோட்டத்திற்குள் வருகிறார். பாவமிழைத்த போதிலும் நம்மைத் தேடி வந்த தெய்வம் அவர் ஒருவரே. நாம் பாவிகளான போதிலும் நமக்காய் இவ்வுலகில் மனிதனாக பிறந்தவர் அவர் ஒருவர் தான். நம் அன்பைப் பெற, நாம் அந்த அன்பில் நிலைத்திருக்க சிலுவையை சுமந்த தெய்வம் இயேசு ஒருவர் மட்டுமே. "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புதலுக்கு அழைக்க வந்தேன்" என்றவர், பாவிகளுக்காக அவமானத்தையும், ஆக்கினையையும், ஆணிகளையும் வாங்கிய ஒரே தேவன் அவர்.


நம்மிடமிருந்த அவர் விரும்பும் ஒரே காரியம் அன்பு மட்டும் தான். வேதத்தின் எல்லா நீதிகளிலும் அன்பே பிரதானம், இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த முதலாம் கற்பனை அது. நம் அன்பில் பிரியப்படுகிற தேவன் அவர். "உம்மை நேசிக்கிறேன்" என்று பேதுரு சொல்ல சொல்ல, "என்னை நேசிக்கின்றாயா?" என்று இயேசு கேட்டு கொண்டே இருந்தார். பேதுரு "உம்மை நேசிக்கிறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்ல அதைக் கேட்டு கேட்டு இயேசு மகிழ்ந்தார். ஒரு கட்டத்ததில் பேதுரு மனமுடைந்து "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்தவர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றே சொல்லிவிட்டார். அந்தளவு நம் அன்பை பெறத் துடிக்கும் அற்புதமான இறைவன் தான் இயேசு கிறிஸ்து.

உலகை விட்டு பரமேறிச் சென்ற போது கூட, உங்களைத் தனித்துவிட எனக்கு மனதில்லை, உங்களுக்காக பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை விட்டுச் செல்வேன், அவர் உங்களுக்குள் வாசம் செய்வார் என பிரியாவிடை கொடுத்தார் இயேசு. கர்த்தரின் அன்பை விளக்கிச் சொல்ல முடியாது, அளவிட முடியாது. அவர் அன்பை ருசித்தால் மட்டுமே நாம் அவரை அறிந்து கொள்ள முடியும், இதை உணர்த்தியே, யோவான் "அன்பில்லாதவன் தேவனை அறியான், ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்!" என்று எழுதினார்.

இதனை சீடர்களின் வாழ்வில் இருந்தே காணலாம். சிலுவைப்பாடுகளின் போது தங்கள் உயிருக்கு அஞ்சி அவரை விட்டு ஓடிப்போன சீஷர்கள் அனைவரும் அதே கிறிஸ்துவை போதித்து தங்கள் உயிரை இரத்த சாட்சிகளாக விட்டுச் சென்றனர். கிறிஸ்துவுக்குள் வந்த ஒருவன் தன் தேவனை அதிகமாய்ச் சொந்தம் பாராட்டும் காரணம் இதுதான், வேறெவரும் தனக்குத் தராத தயவை, அன்பை அவன் கிறிஸ்துவினிடத்தில் இருந்து கண்டு கொண்டான். அந்த அன்பே அவனை கிறிஸ்துவுக்குள் நிலைத்து வாழ, சிலுவையை ஏற்றுக் கொண்டு அவரை பின்தொடர வல்லமை தருகிறது. ஏனெனில் அன்பு சகலமும் தாங்கும், சகலமும் சகிக்கும்...!

அந்த அன்பையும், நம் தேவன் நம்மீது கொண்டுள்ள நேசத்தையும் நீங்கள் அறிய வேண்டாமா? நம்மை விதவிதமாய்ச் சொந்த கொண்டாடும் சில வசனங்களையும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அழகாய் விளக்கிச் சொல்லும் ஒரு வீடியோவையும் இப்போது காணலாம்...


தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லை, உன்னை தாயாக தேற்றுவார்!

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை; ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்" - ஏசாயா 49:15, 66:13

ஒரு தந்தைப் போல உனக்கு இரங்குவார், உன்னை தன் மகனாக தெரிந்து கொண்டவர் அவர்!

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்; அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" - சங்கீதம் 103:13, ரோமர் 8:15

பாவியான நம்மை தன் சகோதரன் என்றழைக்க அவர் வெட்கப்படுவதில்லை...

"எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்" - எபிரேயர் 2:11,12,13

ஒரு மணவாளனை போல உன்னுடன் நிலைத்திருக்க விரும்புகிற கர்த்தர்...

"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப் போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்; நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்" - ஏசாயா 54:5,6, ஓசியா 2:19,20

நம்மை ஊழியக்காரர் என சொல்ல விரும்பாத நண்பன் நம் தேவன்...!

"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" - யோவான் 15:15

உங்களை இவ்வளவாய் நேசிப்பவர் இயேசு...!

Friday, 14 March 2014

பாவம் என்றால் என்ன? இதெல்லாம் பாவமா?


நியாப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் - 1 யோவான் 3:4

நாம் செய்யும் காரியங்களில் எது சரி, எது தவறு என கண்டறிய தேவனின் வார்த்தையை நாட வேண்டும். அதனை அறிந்தும் அந்த வார்த்தைக்கு நாம் செவி கொடுக்காவிட்டால் பாவம் செய்கிறோம். பாவம் நமக்கும் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. எனவே, பாவத்தில் நிலைத்து தேவனுக்கு முன்பாக நீதியற்றவர்களாக இல்லாதபடிக்கு அதற்கான வேத‌ வசனங்களையும் விளக்கங்களையும் அறிந்திருப்பது நல்லது. இந்த பதிவில் பாவத்திற்கென‌ வேதம் கொடுக்கும் சில விளக்கங்களைப் பார்ப்போம்.

1. அவிசுவாசம் ஒரு பாவமே

எபிரேயர் 3:12 - சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னை பாவத்தில் இருந்து முற்றிலும் காத்துக் கொண்ட மனிதன் எவனும் இல்லை என வேதம் கூறுகிறது. நம் பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு இயேசு கிறிஸ்து நமக்கான பலியாக சிலுவையில் ஒப்புக் கொடுக்கப்பட்டார். இந்த தூய இரத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிடில், நம் பாவங்களுக்கு உரிய பலனை நாம் மறுமையில் அடைந்தே தீர வேண்டும். எனவே, இயேசு கிறிஸ்துவை மனப்பூர்வமாக விசுவாசித்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவோம். அவரை விசுவாசியாத பாவம் ஒன்றே அநேகரை நரகத்தில் பங்கடைய செய்கிறது. (யோவான் 16:9; மாற்கு 16:16, வெளி 21:8)

அப்போஸ்தலர் 4:12 - அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

2. அநீதியெல்லாம் பாவம்தான்

1 யோவான் 5:17 - அநீதி எல்லாம் பாவம் தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

கர்த்தர் நீதியுள்ளவர். எனவே நம் அவயங்கள் அநீதிக்கல்ல, நீதிக்கே அடிமையாகட்டும். இதற்கு மாறான நம் அக்கிரமங்கள், அநீதிகள் எல்லாம் பாவம் தான். என்றாலும் அவிசுவாசம் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மரணத்திற்கு அதாவது ஆக்கினைத் தீர்ப்பிற்கேதுவான பாவங்கள் அல்ல. உண்மையாக நாம் மனந்திரும்பி நம் பாவங்களை அறிக்கையிட்டு சிலுவை பலியை ஏற்றுக்கொண்டால் நம் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். இரட்சிப்பிற்கான சிலுவைபலியை நாம் மறுக்கும் போது, நம் ஆக்கினைத் தீர்ப்பு நிச்சயமாகிறது.

1 யோவான் 1:9 - நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

3. நற்காரியத்தை செய்யாவிட்டாலும் பாவம்

யாக்கோபு 4:17 - ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

மனம் அறிந்த ஒரு நற்காரியத்தை செய்யாமல் விட்டாலும் அது அந்த மனிதனுக்கு பாவமாக எண்ணப்படும். நம்மால் இந்த நற்காரியத்தைச் செய்ய முடியும் என்கிற பட்சத்தில், அதனை தட்டிக் கழிக்காமல் செய்து முடிக்க வேண்டும். மனமறிந்த நற்காரியங்களை செய்து, பொல்லாங்காய் தோன்றுகிற அனைத்து தீய செயல்களில் இருந்து விலகி நடந்தால் நாம் நீதியில் நிலைத்திருப்போம்.

கலாத்தியர் 6:9,10 - நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.

4. பிறரை அவமதிப்பது பாவமாகும்

நீதிமொழிகள் 14:21 - பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

பிறரை அவமதிக்கும் வகையில் நாம் என்ன செய்தாலும், பேசினாலும் அது பாவமே. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவனும் தனக்கடுத்தவனை நேசித்து அவனை அவமதியாமல் நடக்கிறான். தனக்கு ஒருவன் எவைகளைச் செய்ய வேண்டும், தன்னிடத்தில் பிறன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோமோ அவ்வாறே நாம் பிறரிடத்தில் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்.

மத்தேயு 7:12 - ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

5. தீய நோக்கம் பாவமே

நீதிமொழிகள் 24:8,9 - தீவினை செய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான், தீயநோக்கம் பாவமாம்.

தீய நோக்கம் கர்த்தருக்கு அருவருப்பானது. தீய எண்ணங்களோடு நாம் எதை செய்தாலும் எதை சிந்தித்தாலும் தீவினை செய்ய பிறரை ஊக்குவித்தாலும் அவைகள் எல்லாம் பாவங்களாகவே எண்ணப்படுகின்றன. கிறிஸ்துவுக்கும் வாழும் எந்த மனிதனும் அவரது சிந்தையை மட்டுமே தரித்து கொள்கிறான். எனவே, தீய எண்ணங்களுக்கு விலகி, கிறிஸ்துவின் சிந்தையில் நிலைத்திருப்பது அவசியம்.

பிலிப்பியர் 2:5 - கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

6. தேவனுடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வராத யாவும் பாவம்

ரோமர் 2:23,24 - நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

தேவனை அறிந்தும், அவரது வார்த்தையை அறிந்திருந்தும் ஒருவன் அவர் கட்டளைகள் படி நடவாவிட்டால் அவன் பாவம் செய்கிறான். அவனது அசுத்தமான செயல்களால் கர்த்தரின் நாமத்திற்கு பிற மக்களால் தூஷணம் ஏற்படும் படி நடந்து கொள்கிறான். இத்தகைய செயல்களில் ஈடுபடும் எவனும் கிறிஸ்துவுக்குள் வந்தவன் அல்ல. அவரில் நிலைத்திருக்கிறேன் என்று சொன்னாலும் அவரோடு அவனுக்கு ஐக்கியமில்லை.

1 யோவான் 1:5,6 - தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாய் இருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாய் இருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம்.

7. பிறரை இச்சையோடு பார்ப்பது பாவம்

I கொரிந்தியர் 6:18 - வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

மாம்ச சிந்தை பாவம். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பவன் தன் மனதில் அவளோடு விபச்சாரம் செய்கிறான். விபச்சாரம், காமம், இச்சை, ஓரினச் சேர்க்கை, வேசித்தனம், மோகம், சுயபுணர்ச்சி என அனைத்து அசுத்த செயல்களுமே பாவம் தான். இத்தகைய செயல்களில் ஈடுபவன் தன் சொந்த சரீரத்தை அசுத்தப்படுத்துகிறான். நமது சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம், ஆவியானவர் எங்கேயோ அங்கு விடுதலை உண்டு, எனவே ஆவியால் சரீரத்தின் தீய செய்கைகளை அழித்து, தேவனுக்கு ஏற்ற தூய பலியாக அதனை ஒப்புக் கொடுக்க வேண்டும். மனிதன் தன் மனைவியோடு ஒரே சரீரமாய் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

நீதிமொழிகள் 5: 18 - 20 - உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவ வேண்டியதென்ன?

8. பிறருக்காக ஜெபியாமலிருப்பது பாவம்

1 சாமுவேல் 12:23 - நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேன் ஆகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாய் இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

குடும்பத்துக்காக, சபைக்காக, ஊழியங்களுக்காக, ஆளுகை செய்பவர்களுக்காக, தேசத்திற்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை ஆகும். அதில் தவறினால் அது தேவனுக்கு முன்பாக பாவமாகும். நாம் பிறரது நலனுக்காக வேண்டுதல் செய்வதில் கர்த்தர் பிரியப்படுகிறார். பிறருக்காக நாம் இரங்கும் போது, கருத்தோடு ஜெபிக்கும் போது அதற்கான ஆசீர்வாதங்களையும், பலன்களையும் நாம் அடையாமற் போவதில்லை.

1 தீமோத்தேயு 2:1,2 - நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தி என்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

9. உலக சிநேகம் பாவமே

1 யோவான் 2:15 - 17 - உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

கர்த்தரை விட உலக காரியங்களை சிநேகிப்போமானால் அது பாவமே (பார்க்க யாக்கோபு 4:4). எனவே, உலக ஐசுவரியங்களுக்கும், சிநேகத்திற்கும், உறவுகளுக்கும் நம் மனதில் முதல் இடம் கொடுப்பதை விட்டு தேவனுக்கு ஏற்ற தூய வாழ்வை வாழ வேண்டும். நம் மனதில் தேவனை முதலாய்த் தேடுவோமானால் இவைகள் எல்லாம் நமக்கு கூட கொடுக்கப்படும். நம் வாழ்வை அவர் தன் கரத்தில் ஏந்தி தேவனே நம்மை குறைவுகளின்றி வழி நடத்துவார்.

மத்தேயு 6:33 - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

10. தேவ சித்தத்தை மீறுவது பாவமாகும்

மத்தேயு 7: 21 - பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

தேவன் நமக்கென ஒரு பாதையை நியமத்திருக்கிறார். உதாரணத்திற்கு, சிலை வழிபாட்டை தேவன் விரும்புவதில்லை. வேதம் கூறுகின்ற தேவனின் இச்சித்தத்தை அறிந்தும் நாம் இயேசு கிறிஸ்துவுக்கும் புனிதர்களுக்கும் சிலைகளை உண்டாக்கி வழிபட்டால் அது மீறுதல் ஆகும். கிறிஸ்துவை அறிந்தும் அவரது சித்தத்திற்கு கீழ்ப்படியாத போது நாம் பாவத்தில் நிலைத்திருக்கிறோம். எனவே தேவ சித்தத்தை விலகி நடப்போமானல் நித்திய ஜீவனையும் இழக்கும் அபாயமிருக்கிறது.

ரோமர் 12:2 - நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

மேற்கொண்டு படிக்க...
பாவத்தை விளக்கும் பிற வேத வசனங்கள்
மீறுதல்கள் (சங்கீதம் 51:1), அக்கிரமம் (சங்கீதம் 51:2), பொல்லாங்கு (சங்கீதம் 51:4), பிழை (சங்கீதம் 19:12), குற்றம் (சங்கீதம் 19:12), பெரும்பாதகம் (சங்கீதம் 19:13)

வேதத்தில் காணப்படும் சில பாவச் செயல்கள்
யாத்திராகமம் 20:3-17; கொரிந்தியர் 6:9,10; ரோமர் 1:29-31; 1 தீமோத்தேயு 1:9-11; கொலோசெயர் 3:5-8; கலாத்தியர் 5:19-21; மாற்கு 7:20-23

----------------------------------------------------------

(பாஸ்டர். நெல்சன் ஞானக்குமார் அவர்களின் செய்தியை - 50 அஸ்திபாரக் கற்கள் - மையமாக வைத்து எழுதப்பட்டது - நன்றி)

Monday, 3 March 2014

காணாமற் போன ஆடு ‍ - தமிழ் பைபிள் வீடியோ


 



வேதப்பகுதி - லூக்கா 15:1 - 7

நானே நல்ல மேய்ப்பன்

சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இயேசு பாவிகளை ஏற்று கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாய் இருந்து, அவைகளில் ஒன்று காணாமற் போனால், தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற் போன ஆட்டை கண்டு பிடிக்குமளவும் தேடி திரியானோ? கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதை தன் தோள்களின் மேல் போட்டு கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற் போன என் ஆட்டை கண்டுபிடித்தேன், என்னோடு கூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அது போல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்று ஒன்பது நீதிமான்களை குறித்து சந்தோஷம் உண்டாகிறதை பார்க்கிலும் மனந் திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tuesday, 25 February 2014

நமக்குள்ள பங்கை நாம் அறியும் போது நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது


வழக்கம் போல அந்த‌ குயவன் அன்று தன் வேலையைத் தொடங்கினான். களிமண்ணை எடுத்து வந்து அதை சுத்தமாகச் சலித்து, தேவையில்லாத குப்பைகளையும், கற்களையும், இலைச் செருகுகளையும் அதிலிருந்து எடுத்துப் போட்டான். பின்பு, தண்ணீரைப் பதமாக ஊற்றி, நன்றாய் பிசைந்து அழகான பாத்திரமாய் அதை வனைந்தான். வனைந்த பாத்திரத்தை நெருப்பில் சுட்டான், அப்போது அது உறுதியானது. நல்ல வழுவழுப்போடு திடமான பாத்திரமாய் இருந்தது, எந்த பிசகும் அதில் இல்லை. செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்த பின்பு, அப்பாத்திரத்தைச் சந்தைக்கு கொண்டு வந்தான். ஒரு பெண் அதனை விரும்பி நல்ல விலைக்கு பெற்றுக் கொண்டாள். தன் கூடையில் வைத்து தலைமேல் சுமந்து கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.

கூடையில் வைக்கப்பட்ட பாத்திரம் அங்கும் இங்கும் மோதியது, தாளமிட்டுக் கொண்டே அந்த பெண்ணோடு வேறிடம் நோக்கிச் சென்றது. தன் தாள ஓசையைக் கேட்டு அதனால் இரசிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னை நேசித்தது, தன் தாளத்தை நேசித்தது, ஆனால் அதனிடம் ஒரு இனம்புரியாத வெறுமை...

அந்த பெண் தன் வீட்டை அடைந்தாள். தன் பழைய பாத்திரங்களோடு, இப்புதிய‌ பாத்திரத்தையும் வைத்தாள். தன்னைப் போன்ற‌ பலரைக் கண்டு அவைகளை நேசித்தது. அவர்களைக் காட்டிலும் தான் பளபளப்போடும் திடமோடும் உள்ளதை நினைத்து தன்னை மெச்சிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமை மட்டும் அதனை விட்டு நீங்கவில்லை...

அப்பெண்ணும் சில நாட்களாக‌ தன் பழைய பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தாள். சிலவற்றில் தண்ணீர் நிரப்பி வைத்தாள், சிலவற்றை சமைக்கப் பயன்படுத்தினாள். புது பாத்திரத்திற்கான நேரமோ இன்னும் வரவில்லை. அவளிடம் தன் நண்பர்கள் படும் அத்தனை பாடுகளையும் அமைதியாக கண்டுகொண்டு இருந்தது. வேலை முடிந்த பின், அப்பெண் தன் பாத்திரங்களை கழுவி கவிழ்த்துவிட்டு போனாள். புதுபாத்திரத்தால் இப்போது நலம் விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. தன் நண்பர்களிடம் அவர்கள் பட்ட பாட்டைச் சொல்லி பெருமூச்சு விட்டது. அதனைக் கேட்டதும் அவைகள் சிரித்தன, குயவன் நம்மை வனைந்ததே அதற்குத்தான் என்றன. புதுபாத்திரத்தால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பளபளப்பு என்றுமே மாறாது என்றது, தனக்கு அவர்கள் நிலை நேரிடப் போவ‌தில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமையான உணர்வு இன்னும் அதனை விட்டு நீங்கவில்லை. அதற்கும் அக்காரணம் புரியவில்லை.

நாட்கள் சென்றன. புதுபாத்திரத்திற்கான நாள் வந்தது. அப்பெண் அதனை எடுத்து அடுப்பில் வைத்தாள், நெருப்பு மூட்டினாள்... பாத்திரம் சூடானது, பளபளப்பு கருகிப் போனது... என் நண்பர்கள் சொல்லியது உண்மைதானா? என் பளபளப்பு அவ்வளவுதானா? இவள் என்னை என்ன செய்யப் போகிறாள்?... புதுபாத்திரத்திற்கு பல விதமான‌ யோசனைகள். யோசிக்க யோசிக்க அவள் அதில் தண்ணீர் ஊற்றினாள். பாத்திரம் தண்ணீரால் நிரம்பியது, உடனே, ஓர் மாற்றம்... நல்ல இதமான மாற்றம்...

அப்போது தான் தன் வெறுமை தன்னை விட்டு காணாமல் போனது அதற்கு புரிந்தது. "என் பளபளப்பு நிலையல்ல, குயவன் வனைந்த நோக்கந்தான் எனக்கு நிலையானது, என் வெறுமையை நீக்கவல்லது" என்றது. அந்த நேரமே தன் நண்பரோடு சேர்ந்து கொண்டது, குயவன் தனக்களித்த வேலையைச் சந்தோஷமாய் செய்த‌து. வெறுமை நீங்கின தன் வாழ்வை நேசித்தது...

இது தான் வேதம் கூறுகின்ற மனித வாழ்க்கை... இறைவன் படைத்த அனைத்து உயிர்களைக் காட்டிலும் மனிதர்களாகிய நாம் சிறந்தவர்கள். பிற உயிர்களைப் படைக்கும் போது, "உண்டாகட்டும்" என்றவ‌ர் மனிதரைப் படைக்கும் போது மண்ணைப் பிசைந்தார், தன் ஜீவனை அவனுக்கு கொடுத்தார். எந்த உயிருக்கும் இல்லாத சுய அறிவை மனிதர்களுக்கு மட்டும் கொடுத்தார். இறைவனின் கரத்தால் படைக்கப்பட்ட ஒரே உயிர் மனிதன் தான். தேவ சாயலில் படைக்கப்பட்ட ஒரே உயிரும் மனிதன் தான். அவர் உண்டாக்கின எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டவன் மனிதன் தான், அனைத்திலும் அதிகமாய் நேசிக்கப்பட்டவன் மனிதன் தான்... அவன் பாவத்தில் விழுந்து, அவரை விட்டு விலகின போதும் தேவன் அவனை நேசித்தார், "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று ஓடி வந்தார்.

குயவன் வனைந்த பாத்திரம் போலவே நாமும் படைக்கப்பட்டோம். நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறியும் வரை நம் வாழ்வில் உள்ள வெறுமைத் தீராது, நம் மனம் ஒன்றைத் தேடித் திரியும். அது என்ன என்று நமக்கு புரியாது. இந்த அனுபவத்தை பெறாத மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் இச்சிந்தனையைத் தூண்டவே மனித மூளையில் "காட் ஸ்பாட்" என்ற பகுதி உள்ளதாகவும் அறிவியல் சொல்கிறது. மனிதர்களைத் தவிர்த்து வேறெந்த உயிரினத்திலும் இந்த பகுதி இல்லை. மனிதனின் வாழ்நாள் முழுவதும் இந்த பகுதி சிந்தனைகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இறைவன் இல்லை எனச் சாத்திப்பவர்களுக்கு காட் ஸ்பாட் அதிக ஆற்றலோடு செயல்படுகிறது. அதன் காரணமாகத் தான் இறைவனின்றி அண்டம் உருவாக வாய்ப்புண்டா என இம்மக்கள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இது இறைவன் நமக்கு வைக்கிற தேர்வு என்றே சொல்லலாம். தன்னை அறிந்துகொள்ள இச்சிந்தையை கொடுத்திருக்கிறார், தன்னை சுட்டிக் காட்டும் அற்புதங்களை படைப்பின் அதிசயங்களை விட்டு வைத்துள்ளார்.

ஏன் நம்மைப் படைத்தவரையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? ஏனெனில் நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட பளபளப்பையே அதிகம் விரும்புகிறோம். சிற்றின்பம், இச்சை, பணம், மோகம், பேராசை என எதையும் இழக்க மனிதன் மறுக்கிறான். இவைகளே தன் மனதிற்கு தேவையான நிறைவை அளிக்க வல்லது என தன்னை தேற்றிக் கொள்கிறான். இத்தகைய எண்ணங்களைக் கொண்ட எந்த மனிதனாலும் பரிசுத்த தேவனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தன் இச்சையை மறுக்கும் இறைவ‌னை அவன் மறுக்கிறான். என்ன மறுத்தாலும் "காட் ஸ்பாட்" தன் வேலையை விடுவதில்லை, அவனை சிந்திக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கிறது... அதனால் என்ன? அதே வெறுமை...

இதற்கு என்ன தீர்வு? நமக்குள்ள பங்கை, நம்மை படைத்தவரை, நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிய வேண்டும். அப்போது நம் மனம் நிரம்பி வழியும், தேவையற்ற வெறுமை நீங்கும், மனம் அமைதியில் பிரேவிசிக்கும். இதனைக் குறித்தே, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று சொன்னார் இயேசு.

இறைவனின் அன்பில் நிலைத்து வாழவே நாம் தேவசாயலில் படைக்கப்பட்டோம். அந்த அன்பில் நிலைத்திருந்தால் தான் நம் உள்ளம் தேடித் திரியும் நிறைவை நாம் பெற முடியும். நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். இந்த அன்பை உணரும் வரை, மனிதன் பல சூழலைத் தாண்டி வருகிறான், அவைகளை நேசித்து மகிழ்கிறான், ஆனால் அவன் பாத்திரம் இன்னும் நிரம்பவில்லை. எச்சமயம் அவன் பாத்திரம் ஜீவத்தண்ணீரால் நிறைகிறதோ அன்றே அவனுக்கு சமாதானம் உண்டாகும், உள்ளம் நிறைவை பெறும், வாழ்க்கை இன்பமாகும்... உபத்திரவங்கள் வந்தாலும், தளராமல் முன்னேறிச் செல்வான், இறைவனை முழுமனதோடு நேசிப்பான், தன்னைப் போல் தனக்கடுத்தவரை நேசிப்பான், இலக்கை நோக்கி ஓடுவான், அதைக் கண்டடைவான்...

அழகாய்ச் சொன்னார் பவுல்,
"...நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டு இருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதை தந்தருளுவார்...."

நீங்கள் நிரம்பிவிட்டீர்களா...?

Friday, 21 February 2014

நம் தேவன் மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவர்...!


நம்மைப் படைத்த தேவன் இணைப்பிரியாத திரியேகர், மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவர்! அந்த அற்புத பிணைப்பை நம்மால் பிரித்து பார்க்க‌ முடியாது, பிரித்தால் நம்மைப் படைத்தவரை அறிய முடியாது... ஆனால்... இந்த உறவு எப்படி சாத்தியம்? பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்றால் என்ன? திரியேகம் என்றால் என்ன? திரியேகத்தை விளக்கிச் சொல்ல முடியுமா? வாருங்கள் காணலாம்...

இந்நாளில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவிடம் மனந்திரும்பினோர் எத்தனையோ நமக்கு தெரியாது, அதை தேவன் தான் அறிவார். அது போல நீங்களும் அவரது அன்பில் வீழ்ந்தவராய் மனந்திரும்புதலுக்கு ஏற்ற‌ ஆவலோடு இங்கு வந்திருக்கலாம். உங்களுக்காக‌ இந்த பதிவு. இயேசு கிறிஸ்துவை உங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நமக்கீந்த இரட்சிப்பைப் பற்றியும், அவர் தம் பிதாவோடு கொண்டுள்ள அழகிய உறவைப் பற்றியும் அறிந்திருப்பது நல்லது. வேத வசனிப்பினால் இந்த சத்தியங்களை அறிந்து கொள்ளலாம். நீங்கள் புதியவராக இருந்தால், உங்களுக்கு விளக்கங்கள் தேவைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு கைக்கொடுக்கும். நன்றி.

திரியேகம் என்றால் என்ன?

1) பிரிக்க முடியாதது, பிரித்தால் பொருளில்லை...
தேவனிடத்தில் இருந்து வார்த்தையும், ஆவியும் புறப்படுகிறது என்று வேதம் கூறுகிறது. இதனைப் பற்றி இரண்டு கேள்விகளை இப்போது ஆராயலாம். ஒன்று, வார்த்தையில்லாத தேவன் சாத்தியமா? மற்றொன்று, ஆவி இல்லாத தேவன் உண்டா? வேதத்தின் பார்வையில் இதற்கான பதில்கள் என்ன...?

அ) வார்த்தை: அவர் சொல்ல ஆகும்...
எசேக்கியேல் 12:25 - "நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்"
தேவன் தன் சித்தத்தை வெளிப்படுத்த ஒரு வார்த்தை சொன்னால் போதும். அந்த வார்த்தை அப்போதே நிறைவேறும். இது வேதம் கூறும் சத்தியம். உதாரணமாக, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த போது, வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். உடனே வெளிச்சம் உண்டாயிற்று. இது தான் நம் தேவனின் வார்த்தை. அவர் சித்தம் வார்த்தையாகும், அந்த‌ வார்த்தை நிறைவேறும்.

இந்த நேரம் தேவனிடத்தில் வார்த்தை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். வார்த்தை இல்லாமல் தேவன் தன் சித்தத்தை எப்படி வெளிப்படுத்துவார்? அவர் மனதால் எண்ணினால் நிறைவேறும் என்று சொல்லலாமா? அப்படி அல்ல, மனதால் எண்ணினாலும் அவர் சித்தம் வார்த்தையாகும். வெளிச்சம் உண்டாக, "வெளிச்சம் உண்டாகட்டும்" என்று தேவன் எண்ணுகிறார். "வெளிச்சம் உண்டாகட்டும்" என்று அவர் எண்ணும் சிந்தனைகளும் வார்த்தைகள் தான்...

வார்த்தையை எடுத்துவிட்டால் தேவனுக்குப் பொருளில்லை. ஏனெனில் வார்த்தையில்லாத தேவனால் எந்த சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. வார்த்தையில்லாமல் தேவன் இல்லை.

ஆ) ஆவி: அவருக்குள் உள்ள ஜீவன்...
யோவான் 1:4 - "அவருக்குள் ஜீவன் இருந்தது"
ஜீவனில்லாத தேவன் உயிரற்ற‌ சடலத்திற்குச் சமம். மேற்கொண்ட எந்த விளக்கம் இதற்கு தேவையில்லை. வார்த்தையைப் போல, ஜீவனில்லாத தேவனுக்கும் பொருளில்லை. இது நாம் அறிந்ததே. கவலை வேண்டாம், உங்களை அழைத்தவர் ஜீவனுள்ள தேவன்!

இ) தேவன் இல்லாவிட்டால்...?

தேவன் இல்லாவிட்டால் வார்த்தையும் ஜீவனும் இல்லை! தேவனே இல்லாத போது, தேவனது வார்த்தையேது? அவருக்குள் வாசம் செய்ய ஆவியேது?

மறுக்க இயலாத‌ சத்தியம் இது. தேவன் தன் வார்த்தையோடும், ஆவியோடும் ஒருமைப்பட்டிருக்கிறார். தேவன் எப்படி முதலும் முடிவும் அற்றவரோ அதை போல அவரது வார்த்தையும் ஜீவனும் முதலும் முடிவும் இல்லாதவை. இறைவனை ஏற்கும் யாராலும் இந்த பிணைப்பை பிரிக்க முடியாது. பிரித்தால் என்னாகும்? தேவனுக்கு பொருளில்லை!

தேவன் + வார்த்தை + ஆவி = ஆற்றல‌ற்ற பொருள்
தேவன் + வார்த்தை + ஆவி = உயிரற்ற பொருள்
தேவன் + வார்த்தை + ஆவி = சாத்தியமல்ல

2) ப‌ரிசுத்த ஆவி நிழலிடும், வார்த்தை மாம்சமாகும்..!


நம்மைப் பாவத்தில் இருந்து நீக்க நம் தேவன் தன்னையே தந்தார். அவர் தான் தேவ‌குமாரன் இயேசு கிறிஸ்து. குமாரன் என்கிற சொல்லை வைத்து, தேவன் மரியாளிடம் இயேசுவை பெற்றெடுத்தார் என்று கருதுவதோ அல்லது தனக்காக ஒரு குமாரனை உருவாக்கிக் கொண்டார் என்று எண்ணுவதோ முற்றிலும் தவறு. கிறிஸ்துவுக்குள் வாழும் எவரும் இவ்வாறு எண்ணுவதில்லை. கிறிஸ்துவை அறியாத மக்களிடத்தில் தான் இத்தகைய தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. நீங்கள் குமாரன் என்கிற வார்த்தையை இத்தகைய பொருளில் எண்ணி இருந்தால் அதை கைவிடுங்கள். குமாரன் என்றால் என்ன? ஆதிமுதல் இருந்த தேவன் நம்மிடத்தில் மனிதனாக வந்தார். அவர் தான் இயேசு. இயேசு தேவனின் தூய பிரதிபலிப்பு. அதன் காரணமாகவே, தன்னைக் குமாரன் என்றார், என்னை கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார். இதனை வேதம் அழகாய் விளக்கியுள்ளது. இரண்டு வேதப்பகுதிகளை இப்போது காணலாம்.
யோவான் 1:1,14 - ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையை கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
மத்தேயு 1: 18‍ - 21 - இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டு இருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாய் இருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாய் இருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாய் இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
குமாரனை அறிய இவ்விரண்டு வாக்கியங்கள் போதும்...

1) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்"

2) "அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது"

தேவ‌னின் வார்த்தையும், தேவனின் தூய ஆவியும் மாம்சமானது, நம் தேவன் நம்மிடத்தில் வந்தார். அவர் தான் இயேசு, தேவனின் தூய பிரதிபலிப்பு. குமாரனைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.

3) தேற்றரவாளன் வந்தார், நமக்குள் வாசம் செய்கிறார்...


நமக்கு அளிக்கப்பட்ட தேற்றரவாளன் தான் பரிசுத்த ஆவியானவர்.

யோவான் 14:24 - என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, நான் உங்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

தேவனிடத்தில் இருந்து புறப்பட்ட ஆவி அவர், அவரது வார்த்தைகளை நமக்குப் போதிப்பவர். தேவவார்த்தையும், தேவனின் ஜீவனும் நமக்குள் வந்தது. அவரே நம் தேற்றரவாளன்...! தேவன் போதித்த சகல வார்த்தைகளையும் நமக்கு நினைவுபடுத்தி நம்மை சத்திய பாதையில் நடக்கச் செய்கிறார்.

இது தான் திரியேகம், பரிசுத்த வேதாகமத்தின் உயிர்நாடி. திரியேகம் இல்லாது வேதத்தை விளக்க முடியாது. ஏன்? திரியேகமின்றி கடவுளைக் கூட‌ நம்மால் விளக்க முடியாது! மகிழ்ந்து களிகூறுங்கள், உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்...!

Monday, 27 January 2014

தேவனுக்கு ஊழியம் செய்வதினால் வரும் ஆசீர்வாதங்கள்


"ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் பிதாவானவர் அவனை கனம் பண்ணுவார்..." யோவான் 12:26


"ஊழியம் செய்கிறவனுக்கும் ஊழியம் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை காண்பீர்கள்..." மல்கியா 3:18


தேவனுக்காக முழு இருதயத்தோடு செய்யப்படும் அனைத்து நற்செயல்களுமே ஊழியப்பணி தான். ஊழியர்கள் அனைவரும் கர்த்தருடைய சம்பத்துக்கள் அதாவது விலையேறப்பெற்ற பொக்கிஷங்கள் என்று வேதம் அங்கீகரிக்கிறது. சாத்ராக். மேஷாக், ஆபெத்நேகா மூவரையும் சோதனை வேளையில் தப்புவித்து உயர்த்தி இவர்களின் தேவனே உண்மையான தேவன் என்று ஜனங்களை, கர்த்தர் சொல்ல வைத்தார். உண்மையோடும் உத்தமத்தோடும் அவர் கட்டளைகளை நாம் நிறைவேற்றும் போது அதற்காக ஒரு காலமும் நாம் வெட்கப்பட்டு போவதில்லை. ஊழியம் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஊழியத்தின் மூலம் செய்யப்பட்ட நன்மைகள், அதனிமித்தம் நாம் அனுபவித்த அலைச்சல்கள், வேதனைகள் என‌ எதையும் அவர் மறப்பத‌ல்ல. கர்த்தர் எல்லாவற்றையும் குறித்து வைத்துள்ளார். மொர்தகாய் போன்ற கவனிக்கப்படாத ஊழியரையும் குறித்து வைத்திருந்து ஒரு நாளில் கனப்படுத்துவார். எந்த ஊழியம் செய்தாலும் அது கர்த்தருக்காகச் செய்யப்படுவதினால் அது நிச்சயம் அவரால் கனப்படுத்தப்படும். இனி, கர்த்தர் தன் ஊழியர்களை எவ்வாறெல்லாம் ஆசீர்வதிக்கிறார் என்பது குறித்து வேதத்தில் இருந்து சில சத்தியங்களை காணலாம்.

1) 2 தீமொத்தேயு 2:21
தேவனால் கனம் பெற்றவர்கள் கர்த்தரால் பயன்படுத்துகிறவர்களாய் இருப்பார்கள். அவர் தம் ஊழியக்காரரை துலக்கமான அம்புகளாக மாற்றி தன் அம்பறாத்துணியில் வைத்திருக்கிறார். அநேக அம்புகள் அதில் இருந்தாலும் சந்தர்ப்பங்கள் வரும் போது தம் அம்பறாத்துணியில் இருந்து நம்மையும் கிருபையாய் எடுத்து தம் வேலைக்காக பயன்படுத்துகிறார். தேவ ராஜ்ஜியத்தில் உபயோகமுள்ளவராய் இருப்பது தான் வாழ்க்கையில் மிக கனம்பொருந்திய விஷயம்.

2) எபிரேயர் 2:7
தேவன் நம்மை தூதரிலும் சற்று சிறியவராக்கி தம் மகிமை, கனத்தினால் முடிசூட்டி சகலத்தையும் நம் பாதத்துக்குக் கீழ்படுத்துகிறார். ஒரு வீட்டுக்குப் போய் வாழ்த்து சொன்னால் அது நிறைவேறும்படிக்கும் நம் வாயின் வார்த்தைகளுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். எலிசாவின் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை அற்புதங்கள் செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எலிசாவின் வாயிலிருப்பது கர்த்தருடைய வார்த்தைகள் என எல்லோரும் சாட்சி சொன்னார்கள்.

3) சங்கீதம் 149:7-9
அவர் தம் ஜனங்கள் மேல் பிரியம் வைத்து இரட்சிப்பினால் அலங்கரித்து அவர்களை கெம்பீரிக்கச் செய்கிறார். தம் ஜனங்களுக்காக ஜாதிகளை பழிவாங்கவும், இராஜாக்களின் மேல் எழுதப்பட்ட நியாத்தீர்ப்பைச் செலுத்தவும் செய்து இப்படிப்பட்ட கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும்படி செய்கிறார்.

4) 1 பேதுரு 1:7
தம் ஊழியர்களுக்கு புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகும்படி செய்கிறார். ஆயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நமக்குக் கிடைக்கிற நற்பெயர் நல்லதல்லவா! ஆபிரகாமை அழைத்து உன் பெயரை பெருமைப்படுத்துவேன் என்று சொன்னதுடன் அது நிறைவேறும்படி செய்தவர் நம் தேவன்.

5) எஸ்தர் 8:16
ஊழியர்களுக்கு சந்தோசத்தை தரவே கர்த்தர் விரும்புகிறார், தம் ஊழியர்களை பார்க்கும் போது களி கூறுகிறார். நாம் நினைப்பதற்கும் அதிகமாய் நேசிக்கிறார். நம் மேல் உள்ள சந்தோஷத்தினால் தான் நாம் தேவனால் பயன்படுத்தப்படுகிறோம். மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவைகளை ஏற்கனவே அவர் நம் வாழ்க்கையில் விதைத்திருக்கிறபடியால் நாம் எதை குறித்தும் கலங்கத் தேவையில்லை. நம் துக்க நாட்கள் அதிசீக்கிரத்தில் முடிந்து போகும்.

6) 1 நாளாகமம் 29:12
ஊழியம் செய்கிறவர்களுக்கு பொருளாதாரத்திலும் உயர்வைத் தந்து ஆசீர்வதிப்பார். ஏனெனில், தாம் அதிக‌மாய் நேசிக்கும் தம் ஊழியர்களுக்கு ஐஸ்வர்யத்தையும், கனத்தையும் கொடுக்கிறார். அவர்கள் சம்பூரணமாக சாப்பிட்டு, பிறரையும் போஷித்து, மீதமும் எடுப்பார்கள்.

7) சங்கீதம் 91:14-15
எதிராளிகளுக்கு தப்புவித்து கனப்படுத்துவார், நமக்கு எதிராய் செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது போகும். சாத்தானுக்கு முன் நம்மை கர்த்த‌ர் எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை. யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் நின்ற போதும் தேவன் சாத்தானை கடிந்து கொண்டு அவனை சேர்த்துக் கொண்டார். நாம் குறையுடையவர்களாய் காணப்பட்டாலும், நம்மை தப்புவித்து நமது குறைவை நிறைவாக்குகிறார்.

8) 1 நாளாகமம் 29:28
நம்முடைய நாட்கள் பூரணப்படும். முதிர் வயதிலும் கனி தந்து பசுமையும் புஷ்டியுமாய் வாழ உதவி வரும். மோசே 120 வயது வாழ்ந்து பூரண வயதுடையவனாய் மரித்தான். அவன் கண் பார்வை மங்கிப் போகவில்லை என்று வேதம் கூறுகிறது. நம்மையும் ஆசீர்வதித்து, நம் பிள்ளைகளையும் ஆசீர்வதித்து நம் பிள்ளைகளின் பிள்ளைகளையும் நாம் காணும்படி தேவன் செய்வார்.

எனவே, கர்த்த‌ருக்காக திருப்பணி செய்ய கலங்கிட வேண்டாம், வேதம் கூறுகின்ற படி, குறித்த நாட்க‌ளில் அதற்கான ஆசீர்வாதங்கள் வாய்க்கும். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது தேவனுக்குப் பிரியம்.

Thursday, 23 January 2014

கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்

"உத்தமும் உண்மையுள்ள ஊழியக்காரனே,
உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி"
(மத்தேயு 25:21)

கர்த்தருக்கு உண்மையாக இருந்து, தனது நாட்டு மக்களைக் கர்த்தரிடம் திருப்புவதற்குத் தன்னாலான யாவற்றையும் செய்த அரசர் யோசியா.


- (படிக்க‌வும்: 2 இராஜாக்கள் 22:1-20)


எட்டு வயதில் அரசரான யோசியா, கர்த்தரை நேசித்து அவருக்கு கீழ்ப்படிந்த சிறப்பான மனிதர். சிறுவயதில் இருந்து கர்த்தரைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்த அவர், பெரியவன் ஆனதும் திட்டமிட்டுக் கர்த்தருக்கென்று பல நல்ல செயல்களைச் செய்தார். கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்த ஒரே அரசர் யோசியா தான். கர்த்தருடைய நியாப்பிரமாணத்தை வாசிக்கக் கேட்டவுடன், தனது நாட்டின் பாவங்களையும் தனது தவறையும் அறிந்து கொண்டு மிகுந்த வருத்தமடைந்தார் யோசியா. முழு மனதோடு ஜெபித்தார், தீர்க்கதரிசியிடம் ஆள் அனுப்பி விசாரித்தார். அதோடு நிற்காமல், கர்த்தருடைய வார்த்தைக்கேற்ப அநேக மாறுதல்களை நாட்டில் ஏற்படுத்தினார்.


கர்த்தருடைய வசனத்தை கேட்டவுடன், அதற்காக மனம் வருந்தி ஜெபித்தது மட்டுமன்றி வேத வார்த்தைப்படி செயல்பட்டார். மக்களைக் கூடிவரச் செய்து அவர்களுக்கு கர்த்தருடைய வசனங்களை அறிவித்து கர்த்தருடன் உடன்படிக்கை செய்ய வைத்தார். பின்பு தன் நாட்டிலும், அண்டை நாடான இஸ்ரவேலிலும் இருந்த மேடைகளையும், சிலைகளையும் அகற்றி, பாவப் பழக்கங்களை அழிக்க முயற்சி எடுத்தார். கர்த்தருடைய வசனத்தின்படி தான் நடந்து கொண்டதுடன், தனது நாட்டு மக்களையும் அவ்வாறு வழி நடத்தினார். தனக்கு பின்பும் அவர்கள் ஒழுங்காயிருக்க, யாவரையும் கர்த்தருடன் உடன்படிக்கை பண்ணும்படி செய்தார். கர்த்தரிடம் தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், தன் முழு பெலத்தோடும் நியாப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதை சாய்த்தார். யோசியாவைப் போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை, அவனுக்குப் பின் எழும்பினதும் இல்லை (2 இராஜாக்கள் 23:25).

ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேற்றபடி பொறுப்புகளையும், திறமைகளையும், வரங்களையும் கர்த்தர் தருகிறார். கர்த்தர் கொடுத்த வாய்ப்புகளையும் காலங்களையும் பயன்படுத்துவதே ஒவ்வொருவருது கடமை. கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டதின் நோக்கம் நாம் கனி கொடுக்க வேண்டும், நமது கனி நிலைக்க வேண்டும். உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தாய் என்று கர்த்தர் எனக்குச் சொல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் செயல்படுங்கள். தேவன் விளைச்சலை தருவார், ஆமென்.