ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7
Showing posts with label மன‌நிறைவு. Show all posts
Showing posts with label மன‌நிறைவு. Show all posts

Monday, 17 March 2014

"உனக்கும் ஸ்தீரிக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்"

ஏன் பலர் புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்? கொத்து கொத்தாக பல உயிர்களைக் கொன்றுத் தீர்க்கும் இந்த நில நடுக்கங்கள் ஏன்? தங்கள் பிள்ளைகளைப் போஷிப்பதற்கு கூட ஏன் மக்கள் இவ்வளவு பாடுபட்டு உழைக்க வேண்டியுள்ளது? இது போன்ற கேள்விகளை நாம் அவ்வப்போது சிந்தியாமல் இருப்பதில்லை. அனுதினமும் ஒரு ஓட்டப் பந்தயம் போல நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் சிறுது நேரம் இளைப்பாறி நம் பாடுகளைக் குறித்து இவ்வாறு பெருமூச்சுவிடுகிறோம்...

நிச்சயமாக நம் வாழ்க்கை பயணம் சில நேரங்களில் சரியில்லை. துன்பங்கள், மரணம், வேளைப்பழு, நோய் நொடி... சில நேரங்களில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் சுபவிசேசங்கள், பதவி உயர்வு, சுற்றுலா, வேடிக்கை, விளையாட்டுகள், பண்டிகைகள்... இது தான் இயற்கை. ஒவ்வொரு மனிதனும் தன் இன்பங்களையும் துன்பங்களையும் கடந்து வந்தே தீர வேண்டும். சரி, ஆனால் நாம் விரும்பாத இந்த துயரச் சம்பவங்கள் நிகழ்வது ஏன்? ஏன் நம் வாழ்க்கை முழுவதும் இன்பமாகவே இருக்கக் கூடாது? இந்த உலகம் ஏன் சீர்கெட்டு போயிருக்கிறது?


நமக்குள் எழும் இந்த கேள்விக்கு வேதம் ஒரு எளிய பதிலைச் சொல்கிறது, இது நம்மீது நாமே இழுத்துக் கொண்ட பாரம்... இந்த வார்த்தைகளை கேட்க நம்மில் பலருக்கு விருப்பமில்லை :-) ஆனால், இப்போதுள்ள இந்த நிலையை மாற்ற முடியுமா? யாரால் முடியும்? எப்படி முடியும்? நமக்கு நித்திய சந்தோஷத்தை, இளைப்பாறுதலைக் கொடுக்க யாரால் முடியும்?

தேவனால் முடியும்... தேவன் ஒருவராலே அன்றி வேறு யாராலும் நமக்கு நித்திய சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. ஆனால் அதை அவர் எளிதில் செய்வதில்லை. இதனால் தேவனைத் தூசித்து அவரைக் கடிந்துக் கொள்வோரும், மறுப்போரும் உண்டு. இவ்வாறு நாம் அவரை குற்றப்படுத்தினால் அவர் மனம்மாறி நமக்கு நித்திய இளைப்பாறுதல் அளித்துவிடுவாரா...? நிச்சயமாக இல்லை :‍-) ஏன்?

ஏனெனில் நாம் விரும்பியதை அவர் நமக்கு அளித்துவிட்டார். கர்த்தரின் கரத்தை விட்டு நம்முடைய வாழ்வை நாமே தீர்மானிக்க விரும்பினோம். அவரது பிரசன்னம் இல்லாத ஒரு வாழ்வை, அவரது உதவிக்கரத்தை புறந்தள்ளிய ஒரு உலகத்தை நாம் விரும்பி பெற்றுக் கொண்டோம். ஆம், நாம் விரும்பிய வாழ்வை தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... எப்படி?

தேவன் மனிதனை சிருஷ்டித்த போது, அவனை அளவில்லாமல் நேசித்து அவன் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை அவனுக்கு ஈந்தளித்தார். சுயாதீனமுடையவர்களாய் இருந்தாலும் நாம் அவரது அன்பிலேயே நிலைத்து வாழவேண்டுமென ஏங்கித் தவித்தார். அதற்காக விலக்கப்பட்ட கனிகளும் சோதனையாக வைக்கப்பட்டன‌. பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு ஆதாமும் ஏவாளும் அக்கனியை புசித்தனர். அவர்கள் அக்கனியைப் புசித்த போதே அவர்கள் தேவ அன்பில் நிலைத்திராத ஒரு வாழ்வையே நேசித்தனர் என்பது புலப்பட்டது. எனவே அவர்கள் நேசித்த வாழ்வை அவர்களுக்கு தேவன் கொடுத்தார். தன் பிரசன்னத்தில் இருந்து அவர்களை அனுப்பிவிட்டார். தேவனின் கரத்தை விட்டு விலகும் போது மனிதன் படவேண்டிய இன்னல்கள் என்ன, அவனுக்கு நயங்காட்டின பிசாசு அவனுக்கு கொடுக்கும் நெருக்கங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் மனிதன் சோதித்து அறியும் ஒரு பாடமாக அந்த வாழ்வு அமைந்தது. தன் பாடத்தை மனிதன் கற்றுக் கொள்ளும் போது, அவன் விரும்பிய உலக வாழ்வையும், அவன் இழந்த நித்திய வாழ்வையும், தன் அற்புத அன்பையும் அவனுக்கு முன்பு தேவன் எடுத்துக் காட்டினார்.

அந்த பாடத்தின் விளைவு என்ன? அவன் இழந்த நித்திய வாழ்வே அவனுக்கு பெரிதாய்க் கண்டது, தான் இழந்த அன்பு எத்தகையது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். தேவ கரத்தை மீண்டும் பற்றிக் கொள்ள ஆவலாய் அவரை நோக்கி ஓடி வந்தான். நம் உலக வாழ்வு நாம் இறைவனை மீண்டும் அண்டிச்சேர அவர் நமக்கு வைத்த பரீட்சை. உலக சிற்றின்பங்களை விட்டுத்தள்ளி, அவரது கரத்தைப் பிடிக்க நாம் வாஞ்சிக்கும் போது அவர் மீண்டும் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்கிறார். நித்திய வாழ்வை நமக்கு கொடுத்து அவரது சமூகத்தில், மார்பில் சாய்ந்து இளைப்பாற தயை செய்கிறார்...!


நாம் விரும்பிய உலக வாழ்வையும், நாம் இழந்த வாழ்வையும், தன் அற்புத அன்பையும் எப்படி தேவன் எடுத்துக் காட்டினார்? நம்மை அன்போடு அழைக்கும் வண்ணம் தன் கரத்தை விரித்து சிலுவையில் மரித்தாரே... அந்த கல்வாரிக் காட்சியே நம்மை அவரை நோக்கி ஓடிவரச் செய்தது...! நித்திய‌ வாழ்வை நமக்கு திரும்பக் கொடுக்கவும், மீண்டும் தேவ அன்பை நோக்கி நம்மை ஓடிவரச் செய்யவும் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். சிலுவையை சுமந்தார். எப்படி? மனிதன் சீரழித்த கொண்ட வாழ்வையும் இளைப்பாறுதலையும் இயேசுவால் எப்படி மீண்டும் கொடுக்க முடிந்தது?

ஆதி 2:7 - "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்"

தேவன் மனிதனை சிருஷ்டித்த நாளிலே தன் சுவாசத்தை அவனுக்கு கொடுத்தார். அப்போது அவன் ஜீவாத்துமாவானான். தான் சிருஷ்டித்த சகலவித தாவரங்களையும், மிருக ஜீவன்களையும் அவனிடத்தில் கொடுத்து "பூமியை ஆண்டுக் கொள்ளுங்கள்" என்றார். தான் மனிதனை நேசிப்பது போல, அவனும் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஆவல் ஒன்றே அவருக்குள் இருந்தது. அதனைக் கண்டறிய ஒரு சோதனையும் வைக்கப்பட்டது...

ஆதியாகமம் 2:16, 17 - தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஏன் அக்கனியை புசிக்கும் போது மனிதன் சாக வேண்டும்? ஏனெனில் விலக்கப்பட்ட கனியை புசிக்கும் போது, மனிதன் தேவனை புரந்தள்ளுகிறான். அச்செயல் தேவ அன்பை விட்டு பிரிந்து மனம் விரும்பிய வாழ்வை அமைத்து கொள்வதற்கு அடையாளமாகும். தேவனைப் புரந்தள்ளும் போது அவர் தம் சுவாசத்தினால் நமக்களித்த நித்திய வாழ்வும் நம்மை விட்டு விலகிவிடும். எனவே, விலக்கப்பட்ட கனியைப் புசிக்காதபடி தேவன் ஆதாமை எச்சரித்தார். ஆனால் ஆதாம் இளைத்த பாவம் என்ன?

ஆதியாகமம் 3:4-6 - அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

மனிதன் தான் விரும்பிய வாழ்வை தெரிந்து கொண்டான். "சாகவே சாவீர்கள்" என தேவன் விலக்கிய செய்கையை செய்து அவர் தனக்கு அளித்த நித்திய ஜீவனை இழந்து போனான். தான் விரும்பிய உலக வாழ்வை பெற்றுக் கொண்டு தேவனுடைய சமூகத்தை விட்டு பிரிந்தான்.

ஆதியாகமம் 3:17 19,23 - பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

ஆனால் நம் தேவனின் அன்பு இவ்வளவு தானா? நிச்சயமாக இல்லை. நாம் தேவ அன்பை விட்டு பிரிந்தாலும், பிசாசு நமக்களித்த பாவ வாழ்க்கையை தெரிந்து கொண்டாலும், தேவன் நம்மை கைவிடவில்லை. மனிதனுக்கும் பிசாசுக்கும் உள்ள உறவை முறித்து நிச்சயமாக பகை உண்டாக்குவேன் என அன்றே வாக்களித்தார். ஒரு பெண்ணின் வித்தைக் கொண்டு பிசாசின் தலையை நசுக்குவேன், அவன் அவர் குதிங்காலை நசுக்குவான் என்று சொன்னார்.

ஆதியாகமம் 3:15 - "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்"

இதுதான் இயேசு கிறிஸ்து நமக்களிக்கவிருக்கும் இரட்சிப்பைக் குறித்து வேதம் முன்கூறிய முதல் தீர்க்கதரிசனமாகும். இரட்சிப்பின் காலம் வருகின்ற வரை ஆதாமின் பாவ சாயலிலேயே வித்துகள் பிறந்தனர்.

ஆதியாகமம் 5:1,3 - தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின் படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

இரட்சிப்பை காலம் வந்த பிறகே தேவ சாயலில் வித்து தோன்றியது. இறைவனின் கட்டளையை ஏற்று நடந்த பெண்ணின் கர்ப்பத்தில் தேவகுமாரன் உண்டானார். பாவமிழைத்த ஆதாமின் வித்தாக அல்ல, அவளிடத்தில் உற்பத்தியானது பரிசுத்த ஆவியினால் உண்டானது. ஆதாம் இழந்த போன தேவ சுவாசத்தால் உண்டான குழந்தை அது...! சிருஷ்டிப்பிற்கு பிறகு, தேவசாயலாலும் பரிசுத்த ஆவியாலும் பிறந்த ஒருவர் இயேசுவே.

மத்தேயு 1:20,21 - "...தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்..."

ஆதாம் பிசாசால் சோதிக்கப்பட்டது போலவே இயேசு கிறிஸ்துவும் சோதிக்கப்பட்டார். ஆதாமுக்கு அவன் எவ்வாறு நயங்காட்டினானோ, அதைப் போலவே இயேசுவுக்கும் உலகை சுட்டிக் காட்டினான். ஆனால் இயேசு என்ன செய்தார்? ஆதாம் தன் பரிசுத்த ஆவியை இழந்தது போல இயேசு கிறிஸ்து ஒருபோதும் இழக்கவில்லை. தன் ஆவியில் நிலைத்து நின்றவர் தான் நம் தேவகுமாரன்.

லூக்கா 4:5-8 - பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின் மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்து கொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இவை நாம் கூர்ந்து தியானிக்க வேண்டிய திருமறை வசனங்கள். பிசாசு வஞ்சித்த போது, ஆதாம் தேவன் தனக்கு அருளிய வார்த்தையை புரந்தள்ளினான். தேவனை விட, பிசாசு அளித்த சிற்றின்பங்களே ஆதாமின் கண்களுக்கு பெரிதாய்க் கண்டது. ஆனால், இயேசு கிறிஸ்து "எழுதியிருக்கிறதே" என் சொல்லி தேவ வார்த்தையை நினைப்பூட்டினார். பிசாசைக் கண்டித்து புரந்தள்ளி தேவவார்த்தையை ஏற்றுக் கொண்டார். இது தான் இயேசுவானவர் நமக்கு காட்டிய வாழ்க்கை. நாம் இழந்து போன நித்திய வாழ்வையும், நாம் விரும்பி ஏற்றுக் கொண்ட உலக வாழ்வையும் பிரித்துக் காட்டி தேவ வார்த்தைகளை நம் மனதில் எழுதினார்.

இவைகள் எல்லாம் நம் கண்முன் அவர் விட்டுச் சென்ற உன்னத கால்தடங்கள். போதனைகளால் நம்மை மீட்டுக் கொண்டாரா? அல்ல, நம் அன்பை பெற, நமக்கும் பிசாசுக்கும் பகை உண்டாக்க சிலுவையை சுமந்தார். அவரது கல்வாரி அன்பைக் கண்ட நொடியே, மனிதன் பிசாசு தனக்களித்த உலகைவிட்டு கர்த்தரை சரணடைந்தான். "பகை உண்டாக்குவேன்" என சொல்லியவாறே, நம் மனதில் பகை உண்டாக்கினார் தேவன். தேவ மனிதர்களின் போதனைகளும் ஓலைகளில் எழுதப்பட்ட வார்த்தைகளும் அல்ல, கல்வாரி அன்பே நம்மை பாவத்தில் இருந்து மீட்டுக் கொண்டது. இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தமே நம்மை சுத்திகரிக்க முடியும். அவர் ஒருவரால் மட்டுமே நமக்கு பிசாசின் பிடியில் இருந்து விடுதலை கொடுக்க முடியும், அந்த கல்வாரி அன்பே மனிதன் தேவனை முழு மனதோடு நேசிக்கச் செய்தது. எப்படி? பேதுரு நம் கண்ணே அத்தாட்சியாய் நிற்கிறார்...


"ஆண்டவரே சாவானாலும் சிறையானாலும் உம்மை பின் தொடர்வேன்" என பேதுரு சொன்ன போது, "சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுவிசை நீ என்னை மறுதலிப்பாய்" என்று இயேசு சொன்னார். சொன்ன படியே கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு, பேதுரு மூன்று முறை மறுதலித்து தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிப் போனார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கர்த்தர் பேதுருவிடம் "என்னை நேசிக்கின்றாயா?" என்றார். அதற்கு பேதுரு, "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்று சொன்னார். ஆனால் இந்த முறை இயேசு பேதுருவை நோக்கிச் சொன்னார்,

யோவான் 21:18,19 - நீ இளவயதுள்ளவனாய் இருந்த போது உன்னை நீயே அரைக் கட்டிக் கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டு போவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் குறிக்கும் படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லிய பின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.

பேதுரு தனக்காய் உயிரையும் விடத் துணிந்தவர் என்று இயேசு சொல்லிக் காட்டிய வேதவசனம் இது. உயிருக்கு அஞ்சி தேவனுக்கு கொடுத்த வார்த்தையை மறந்து ஓடிப் போன பேதுரு இவர் தான். கல்வாரிக் காட்சிக்கு பின்பு, உயிரையும் ஈந்து சுவிசேசத்தை போதித்த பேதுருவும் இவர் தான். சுவிசேஷத்தை போதித்தமைக்காக பேதுருவும் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு கிறிஸ்துவுக்கு நிகராய் என்னை அறையாமல் தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும் என்று பேதுரு சொன்னாராம். அவர் விரும்பிய வண்ணமே தண்டனை நிறைவேற்றப்பட்டது. நல்ல போராட்டம் போராடி தேவ இராஜ்ஜியத்துக்குள் நுழைந்தார். இந்த மனமாற்றம் ஏன்? சிலுவையில் கரம்விரித்து அழைத்த கர்த்தரை நோக்கி மனிதன் மீண்டும் ஓடினான். அன்றே "எல்லாம் முடிந்தது", வேத வாக்கியம் நிறைவேறியது...


ஆதியாகமம் 3:15 "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்"

தேவன் தனக்களித்த ஜீவனை இழந்த மனிதன், அதை மீண்டும் பெற்றுக் கொண்டான், அவன் மனந்திரும்பி தன்னிடத்தில் வந்த போது நேச கர்த்தர் மீண்டும் அளித்தார். பரலோகத்தில் தன்னுடன் நிலைத்து வாழ அவர் அளித்த கிருபை எவ்வளவு இன்பமானது.

"இயேசு மறுபடியும்....அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்" - யோவான் 20:21,22

நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?

Sunday, 16 March 2014

உன்னைச் சொந்தங் கொண்டாடும் உன்னதர்...


நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் இல்லை என்றே சொல்லலாம். பரிசுத்த வேதாகமத்தை மனதார விசுவாசித்து படிக்கும் போது இயேசுவின் அன்பிலிருந்து நம்மால் தப்ப முடியாது. தன் தூய அன்பால், வேத வார்த்தைகளால் நம் மனதாய் எளிதாய் கொள்ளையிட்டு விடுவார். இது எப்படி சாத்தியமாகிறது? ஏன் கிறிஸ்துவுக்குள் வந்தவன் தேவனை அதிகமாக உரிமை பாராட்டுகிறான்? தன் தேவனை "அப்பா பிதாவே" என்று அன்போடு அழைத்து, நேசித்து மகிழ அவனால் எப்படி முடிகிறது? ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

ஏனெனில் இயேசு கிறிஸ்து நமக்காக அந்தளவு அன்பும் பரிவும் கொண்டிருக்கிறார். வேதம் சொல்வது போல, நாம் அவரை முதலாய் நேசிக்கவில்லை, அவர் நம்மை முதலாய் நேசித்து நமக்காய் அவரை ஒப்புக் கொடுத்தபடியினால் நாம் இவ்வாறு தேவ அன்பில் தத்தளித்து மகிழ்கிறோம். இயேசு கிறிஸ்து காட்டிய பாதை பிற வழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தேவனை நமக்கு எல்லாரும் எஜமானனாக, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அதிபதியாக சித்தரிப்பதை விட ஒரு நல்ல தாயாக, நல்ல தந்தையாக, நல்ல சகோதரனாக, ஆத்ம நேசராக, உயிர்த் தோழனாக பரிசுத்த வேதம் சித்தரிக்கிறது. இவ்வாறு நம்மை மகனாக, மகளாக, மணப்பெண்ணாக, தோழனாக அழைத்து மகிழும் தேவன் இயேசு கிறிஸ்துவை அன்றி வேறு யாருண்டு?

நம்மை ஒரு வேலையாளாக, தன் கரத்தின் சிருஷ்டியாக, தன் மனம் விரும்பும் காரியத்தை மட்டும் செய்ய பயன்படுத்தும் ஒரு அடிமையாக அவர் எண்ணாமல், நம்மை அவரது அன்பிற்கு முழு தகுதியுடையவர்களாக‌ காண்கிறார். அதன் காரணமாகத் தான், "தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்", "மார்போடு அணைப்பார்", "கரத்தை பிடித்து வழிநடத்துவார்", "முத்தமிடுவார்" என பல அன்புமிகுந்த வார்த்தைகளை வேதம் கூறுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இத்தகைய பாசப் பரிமாறுதல்களை வேறெந்த நூல்களிலும் காண முடியாது. எனவே ஒரு எஜமானிடம் ஒரு அடிமை கரமேந்தி நிற்பது போல, வெறும் கட்டளையை ஏற்று நடக்கும் ஒரு வேலைக்காரனாக நாம் தேவனிடத்தில் செல்லத் தேவையில்லை. "அப்பா பிதாவே" என்று அழைக்கும் உரிமையோடு, அன்போடு அவரிடத்தில் ஜெபித்து மகிழலாம், அனுதினமும் அவரது பிரசன்னத்தில் ஆனந்தமாக நம் வாழ்க்கையை நடத்தலாம். இத்தகைய சந்தோஷத்தை உரிமையை நமக்கு ஈந்தவர் இயேசு கிறிஸ்து மட்டுமே...

வேதம் கூறும் இன்னொரு அழகிய செய்தி இதுதான். மனிதன் தேவனை நேசிக்காவிட்டாலும், கர்த்தர் அவனை நேசிப்பதை விடுவதில்லை. மனிதன் பாவம் செய்து அவரது சமூகத்தில் இருந்து விலகி மறைந்து கொண்டாலும், தேவன் அவனை தேடிக் கொண்டு கவலையோடு அலைந்து திரிகிறார். ஆதாம் பாவமிழைத்து கர்த்தரின் கண்களில் இருந்து மரங்களுக்குள் ஒளிந்தாலும் தேவன் அவனை சத்தமிட்டு அழைத்து கொண்டு தோட்டத்திற்குள் வருகிறார். பாவமிழைத்த போதிலும் நம்மைத் தேடி வந்த தெய்வம் அவர் ஒருவரே. நாம் பாவிகளான போதிலும் நமக்காய் இவ்வுலகில் மனிதனாக பிறந்தவர் அவர் ஒருவர் தான். நம் அன்பைப் பெற, நாம் அந்த அன்பில் நிலைத்திருக்க சிலுவையை சுமந்த தெய்வம் இயேசு ஒருவர் மட்டுமே. "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புதலுக்கு அழைக்க வந்தேன்" என்றவர், பாவிகளுக்காக அவமானத்தையும், ஆக்கினையையும், ஆணிகளையும் வாங்கிய ஒரே தேவன் அவர்.


நம்மிடமிருந்த அவர் விரும்பும் ஒரே காரியம் அன்பு மட்டும் தான். வேதத்தின் எல்லா நீதிகளிலும் அன்பே பிரதானம், இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த முதலாம் கற்பனை அது. நம் அன்பில் பிரியப்படுகிற தேவன் அவர். "உம்மை நேசிக்கிறேன்" என்று பேதுரு சொல்ல சொல்ல, "என்னை நேசிக்கின்றாயா?" என்று இயேசு கேட்டு கொண்டே இருந்தார். பேதுரு "உம்மை நேசிக்கிறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்ல அதைக் கேட்டு கேட்டு இயேசு மகிழ்ந்தார். ஒரு கட்டத்ததில் பேதுரு மனமுடைந்து "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்தவர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றே சொல்லிவிட்டார். அந்தளவு நம் அன்பை பெறத் துடிக்கும் அற்புதமான இறைவன் தான் இயேசு கிறிஸ்து.

உலகை விட்டு பரமேறிச் சென்ற போது கூட, உங்களைத் தனித்துவிட எனக்கு மனதில்லை, உங்களுக்காக பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை விட்டுச் செல்வேன், அவர் உங்களுக்குள் வாசம் செய்வார் என பிரியாவிடை கொடுத்தார் இயேசு. கர்த்தரின் அன்பை விளக்கிச் சொல்ல முடியாது, அளவிட முடியாது. அவர் அன்பை ருசித்தால் மட்டுமே நாம் அவரை அறிந்து கொள்ள முடியும், இதை உணர்த்தியே, யோவான் "அன்பில்லாதவன் தேவனை அறியான், ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்!" என்று எழுதினார்.

இதனை சீடர்களின் வாழ்வில் இருந்தே காணலாம். சிலுவைப்பாடுகளின் போது தங்கள் உயிருக்கு அஞ்சி அவரை விட்டு ஓடிப்போன சீஷர்கள் அனைவரும் அதே கிறிஸ்துவை போதித்து தங்கள் உயிரை இரத்த சாட்சிகளாக விட்டுச் சென்றனர். கிறிஸ்துவுக்குள் வந்த ஒருவன் தன் தேவனை அதிகமாய்ச் சொந்தம் பாராட்டும் காரணம் இதுதான், வேறெவரும் தனக்குத் தராத தயவை, அன்பை அவன் கிறிஸ்துவினிடத்தில் இருந்து கண்டு கொண்டான். அந்த அன்பே அவனை கிறிஸ்துவுக்குள் நிலைத்து வாழ, சிலுவையை ஏற்றுக் கொண்டு அவரை பின்தொடர வல்லமை தருகிறது. ஏனெனில் அன்பு சகலமும் தாங்கும், சகலமும் சகிக்கும்...!

அந்த அன்பையும், நம் தேவன் நம்மீது கொண்டுள்ள நேசத்தையும் நீங்கள் அறிய வேண்டாமா? நம்மை விதவிதமாய்ச் சொந்த கொண்டாடும் சில வசனங்களையும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அழகாய் விளக்கிச் சொல்லும் ஒரு வீடியோவையும் இப்போது காணலாம்...


தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லை, உன்னை தாயாக தேற்றுவார்!

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை; ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்" - ஏசாயா 49:15, 66:13

ஒரு தந்தைப் போல உனக்கு இரங்குவார், உன்னை தன் மகனாக தெரிந்து கொண்டவர் அவர்!

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்; அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" - சங்கீதம் 103:13, ரோமர் 8:15

பாவியான நம்மை தன் சகோதரன் என்றழைக்க அவர் வெட்கப்படுவதில்லை...

"எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்" - எபிரேயர் 2:11,12,13

ஒரு மணவாளனை போல உன்னுடன் நிலைத்திருக்க விரும்புகிற கர்த்தர்...

"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப் போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்; நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்" - ஏசாயா 54:5,6, ஓசியா 2:19,20

நம்மை ஊழியக்காரர் என சொல்ல விரும்பாத நண்பன் நம் தேவன்...!

"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" - யோவான் 15:15

உங்களை இவ்வளவாய் நேசிப்பவர் இயேசு...!

Tuesday, 25 February 2014

நமக்குள்ள பங்கை நாம் அறியும் போது நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது


வழக்கம் போல அந்த‌ குயவன் அன்று தன் வேலையைத் தொடங்கினான். களிமண்ணை எடுத்து வந்து அதை சுத்தமாகச் சலித்து, தேவையில்லாத குப்பைகளையும், கற்களையும், இலைச் செருகுகளையும் அதிலிருந்து எடுத்துப் போட்டான். பின்பு, தண்ணீரைப் பதமாக ஊற்றி, நன்றாய் பிசைந்து அழகான பாத்திரமாய் அதை வனைந்தான். வனைந்த பாத்திரத்தை நெருப்பில் சுட்டான், அப்போது அது உறுதியானது. நல்ல வழுவழுப்போடு திடமான பாத்திரமாய் இருந்தது, எந்த பிசகும் அதில் இல்லை. செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்த பின்பு, அப்பாத்திரத்தைச் சந்தைக்கு கொண்டு வந்தான். ஒரு பெண் அதனை விரும்பி நல்ல விலைக்கு பெற்றுக் கொண்டாள். தன் கூடையில் வைத்து தலைமேல் சுமந்து கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.

கூடையில் வைக்கப்பட்ட பாத்திரம் அங்கும் இங்கும் மோதியது, தாளமிட்டுக் கொண்டே அந்த பெண்ணோடு வேறிடம் நோக்கிச் சென்றது. தன் தாள ஓசையைக் கேட்டு அதனால் இரசிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னை நேசித்தது, தன் தாளத்தை நேசித்தது, ஆனால் அதனிடம் ஒரு இனம்புரியாத வெறுமை...

அந்த பெண் தன் வீட்டை அடைந்தாள். தன் பழைய பாத்திரங்களோடு, இப்புதிய‌ பாத்திரத்தையும் வைத்தாள். தன்னைப் போன்ற‌ பலரைக் கண்டு அவைகளை நேசித்தது. அவர்களைக் காட்டிலும் தான் பளபளப்போடும் திடமோடும் உள்ளதை நினைத்து தன்னை மெச்சிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமை மட்டும் அதனை விட்டு நீங்கவில்லை...

அப்பெண்ணும் சில நாட்களாக‌ தன் பழைய பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தாள். சிலவற்றில் தண்ணீர் நிரப்பி வைத்தாள், சிலவற்றை சமைக்கப் பயன்படுத்தினாள். புது பாத்திரத்திற்கான நேரமோ இன்னும் வரவில்லை. அவளிடம் தன் நண்பர்கள் படும் அத்தனை பாடுகளையும் அமைதியாக கண்டுகொண்டு இருந்தது. வேலை முடிந்த பின், அப்பெண் தன் பாத்திரங்களை கழுவி கவிழ்த்துவிட்டு போனாள். புதுபாத்திரத்தால் இப்போது நலம் விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. தன் நண்பர்களிடம் அவர்கள் பட்ட பாட்டைச் சொல்லி பெருமூச்சு விட்டது. அதனைக் கேட்டதும் அவைகள் சிரித்தன, குயவன் நம்மை வனைந்ததே அதற்குத்தான் என்றன. புதுபாத்திரத்தால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பளபளப்பு என்றுமே மாறாது என்றது, தனக்கு அவர்கள் நிலை நேரிடப் போவ‌தில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமையான உணர்வு இன்னும் அதனை விட்டு நீங்கவில்லை. அதற்கும் அக்காரணம் புரியவில்லை.

நாட்கள் சென்றன. புதுபாத்திரத்திற்கான நாள் வந்தது. அப்பெண் அதனை எடுத்து அடுப்பில் வைத்தாள், நெருப்பு மூட்டினாள்... பாத்திரம் சூடானது, பளபளப்பு கருகிப் போனது... என் நண்பர்கள் சொல்லியது உண்மைதானா? என் பளபளப்பு அவ்வளவுதானா? இவள் என்னை என்ன செய்யப் போகிறாள்?... புதுபாத்திரத்திற்கு பல விதமான‌ யோசனைகள். யோசிக்க யோசிக்க அவள் அதில் தண்ணீர் ஊற்றினாள். பாத்திரம் தண்ணீரால் நிரம்பியது, உடனே, ஓர் மாற்றம்... நல்ல இதமான மாற்றம்...

அப்போது தான் தன் வெறுமை தன்னை விட்டு காணாமல் போனது அதற்கு புரிந்தது. "என் பளபளப்பு நிலையல்ல, குயவன் வனைந்த நோக்கந்தான் எனக்கு நிலையானது, என் வெறுமையை நீக்கவல்லது" என்றது. அந்த நேரமே தன் நண்பரோடு சேர்ந்து கொண்டது, குயவன் தனக்களித்த வேலையைச் சந்தோஷமாய் செய்த‌து. வெறுமை நீங்கின தன் வாழ்வை நேசித்தது...

இது தான் வேதம் கூறுகின்ற மனித வாழ்க்கை... இறைவன் படைத்த அனைத்து உயிர்களைக் காட்டிலும் மனிதர்களாகிய நாம் சிறந்தவர்கள். பிற உயிர்களைப் படைக்கும் போது, "உண்டாகட்டும்" என்றவ‌ர் மனிதரைப் படைக்கும் போது மண்ணைப் பிசைந்தார், தன் ஜீவனை அவனுக்கு கொடுத்தார். எந்த உயிருக்கும் இல்லாத சுய அறிவை மனிதர்களுக்கு மட்டும் கொடுத்தார். இறைவனின் கரத்தால் படைக்கப்பட்ட ஒரே உயிர் மனிதன் தான். தேவ சாயலில் படைக்கப்பட்ட ஒரே உயிரும் மனிதன் தான். அவர் உண்டாக்கின எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டவன் மனிதன் தான், அனைத்திலும் அதிகமாய் நேசிக்கப்பட்டவன் மனிதன் தான்... அவன் பாவத்தில் விழுந்து, அவரை விட்டு விலகின போதும் தேவன் அவனை நேசித்தார், "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று ஓடி வந்தார்.

குயவன் வனைந்த பாத்திரம் போலவே நாமும் படைக்கப்பட்டோம். நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறியும் வரை நம் வாழ்வில் உள்ள வெறுமைத் தீராது, நம் மனம் ஒன்றைத் தேடித் திரியும். அது என்ன என்று நமக்கு புரியாது. இந்த அனுபவத்தை பெறாத மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் இச்சிந்தனையைத் தூண்டவே மனித மூளையில் "காட் ஸ்பாட்" என்ற பகுதி உள்ளதாகவும் அறிவியல் சொல்கிறது. மனிதர்களைத் தவிர்த்து வேறெந்த உயிரினத்திலும் இந்த பகுதி இல்லை. மனிதனின் வாழ்நாள் முழுவதும் இந்த பகுதி சிந்தனைகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இறைவன் இல்லை எனச் சாத்திப்பவர்களுக்கு காட் ஸ்பாட் அதிக ஆற்றலோடு செயல்படுகிறது. அதன் காரணமாகத் தான் இறைவனின்றி அண்டம் உருவாக வாய்ப்புண்டா என இம்மக்கள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இது இறைவன் நமக்கு வைக்கிற தேர்வு என்றே சொல்லலாம். தன்னை அறிந்துகொள்ள இச்சிந்தையை கொடுத்திருக்கிறார், தன்னை சுட்டிக் காட்டும் அற்புதங்களை படைப்பின் அதிசயங்களை விட்டு வைத்துள்ளார்.

ஏன் நம்மைப் படைத்தவரையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? ஏனெனில் நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட பளபளப்பையே அதிகம் விரும்புகிறோம். சிற்றின்பம், இச்சை, பணம், மோகம், பேராசை என எதையும் இழக்க மனிதன் மறுக்கிறான். இவைகளே தன் மனதிற்கு தேவையான நிறைவை அளிக்க வல்லது என தன்னை தேற்றிக் கொள்கிறான். இத்தகைய எண்ணங்களைக் கொண்ட எந்த மனிதனாலும் பரிசுத்த தேவனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தன் இச்சையை மறுக்கும் இறைவ‌னை அவன் மறுக்கிறான். என்ன மறுத்தாலும் "காட் ஸ்பாட்" தன் வேலையை விடுவதில்லை, அவனை சிந்திக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கிறது... அதனால் என்ன? அதே வெறுமை...

இதற்கு என்ன தீர்வு? நமக்குள்ள பங்கை, நம்மை படைத்தவரை, நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிய வேண்டும். அப்போது நம் மனம் நிரம்பி வழியும், தேவையற்ற வெறுமை நீங்கும், மனம் அமைதியில் பிரேவிசிக்கும். இதனைக் குறித்தே, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று சொன்னார் இயேசு.

இறைவனின் அன்பில் நிலைத்து வாழவே நாம் தேவசாயலில் படைக்கப்பட்டோம். அந்த அன்பில் நிலைத்திருந்தால் தான் நம் உள்ளம் தேடித் திரியும் நிறைவை நாம் பெற முடியும். நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். இந்த அன்பை உணரும் வரை, மனிதன் பல சூழலைத் தாண்டி வருகிறான், அவைகளை நேசித்து மகிழ்கிறான், ஆனால் அவன் பாத்திரம் இன்னும் நிரம்பவில்லை. எச்சமயம் அவன் பாத்திரம் ஜீவத்தண்ணீரால் நிறைகிறதோ அன்றே அவனுக்கு சமாதானம் உண்டாகும், உள்ளம் நிறைவை பெறும், வாழ்க்கை இன்பமாகும்... உபத்திரவங்கள் வந்தாலும், தளராமல் முன்னேறிச் செல்வான், இறைவனை முழுமனதோடு நேசிப்பான், தன்னைப் போல் தனக்கடுத்தவரை நேசிப்பான், இலக்கை நோக்கி ஓடுவான், அதைக் கண்டடைவான்...

அழகாய்ச் சொன்னார் பவுல்,
"...நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டு இருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதை தந்தருளுவார்...."

நீங்கள் நிரம்பிவிட்டீர்களா...?