ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Saturday, 15 February 2014

தனித்து விளங்கும் பரிசுத்த வேதாகமம்!


உலகின் வேறெந்த வேதங்களைக் காட்டிலும், தன் எழுத்திலும் சரித்திரச் செரிவிலும் தனித்து விளங்குவது பரிசுத்த வேதாகமமே...

பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு
1500 ஆண்டுகளாக 40 ஆசிரியர்களால் எழுதப்பட்ட வேதம் பைபிள். 66 நூல்களை தன்னுள் கொண்டுள்ளது. பைபிளைப் படிக்கும் போதே, பிற பழங்கால நூல்களில் இருந்து அதன் எழுத்துநடை வேறுப்பட்டு விளங்குவதை அறிய இயலும். தன் செய்திகளையும், கதாப்பாத்திரங்களையும், காலங்களையும் சரித்திர பிண்ணனிக் கொண்டு விளக்குவதாக தன் எழுத்து நடையை பெற்றள்ளது. இன்று வரை அச்சம்பவங்களை சரித்திரவான்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.

ஆசிரியர்களின் தனிப்பட்ட எழுத்து ந‌டையினாலும் அவர்கள்தம் கதாப்பாத்திரங்களாலும், தான் யார் என்பதையும், தன்னை அறிவது எப்படி என்பது குறித்தும் கர்த்தர் தெளிவாக விளக்கியுள்ளார். நாற்பது நபர்களால் 1500 ஆண்டு கால இடைவெளியில் இயற்றப்பட்ட நூலாயினும், ஒரே கருப்பொருளையே பைபிள் அழுத்திச் சொல்கிறது. நம்மை சிருஷ்டித்தவர் நம்மோடு உறவு பாராட்ட விரும்புகிறார், நாம் அவரை அறிந்துகொண்டு விசுவாசிக்க அழைக்கிறார். இதுவே அதன் 66 நூல்களின் மையச்செய்தி.

பைபிள் நம்மை ஈர்ப்பதாக மட்டும் அல்ல, அது கடவுளையும் அவர் நமக்காக வைத்துள்ள நித்திய ஜீவனையும் நம்மிடம் விளக்கிக் கூறும் நூலாகும். அன்பும் அர்த்தமும் மிகுந்த நல்ல வாழ்வுக்கு ஒரு வழிகாட்டி. கடவுளின் வழியிலும் பெலத்திலும் வாழ, அவரது அன்பை அன்றாடம் ருசிக்க பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகின்றது. கடவுளின் கரம் பதிந்த நூல் தான் பைபிள். அதன் சரித்திரச் செரிவையும், சத்திய வார்த்தைகளையும் தலைப்பு வாரியாக இப்போது காணலாம்.

1. தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவுகின்ற பைபிள்
இந்த நாள் வரை, தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பைபிள் உதவிக்கரம் கொடுத்து வருகிறது. அகழ்வாராய்ச்சி மூலம் கண்டு கொள்ளப்பட்ட அரசர்கள், சாம்ராஜ்ஜியங்கள், பட்டணங்கள், பண்டிகைகள் போன்ற பல சரித்திர தடயங்களை பைபிள் உறுதி செய்கிறது. ஆம், இக்கண்டுபிடிப்புகள் நிகழ்கின்ற வரை, அந்த‌ நபர்களையும், இடங்களையும் சரித்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இக்கண்டுபிடிப்புகளுக்கு முன்பிருந்தே அந்நபர்களுக்கும் இடங்களுக்கும் பைபிள் சரித்திர அடையாளம் கொடுத்து வந்தது. உதாரணத்திற்கு, பெதஸ்தா குளத்தை எடுத்துக் கொள்ளலாம். எருசலேமின் ஆட்டுவாசல் அருகே எபிரேய பாஷையில் பெதஸ்தா என சொல்லப்பட்ட குளம் ஒன்று இருந்ததாகவும், அதற்கு ஐந்து மண்டபங்கள் இருந்தன என்றும் பைபிள் கூறுகிறது (யோவான் 5:2). அத்தகைய குளம் எதுவும் எருசலேமில் இருந்ததில்லை என சரித்திரவான்கள் கூறி வந்தனர். ஆனால், அகழ்வராய்ச்சியர்களால் நாற்பது அடிகளுக்கு கீழ் புதைந்து கிடந்த குளம் ஒன்றும், அதனை சுற்றி ஐந்து மண்டபங்களும் பிற்காலத்தில் க‌ண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கண்டுபிடித்த குளம் பெதஸ்தா என்பதை பைபிளைக் கொண்டு உறுதி செய்தனர்.

பெதஸ்தா குளம்

இதுபோன்று பல சரித்திரச் செய்திகளை பைபிள் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒவ்வொன்றாக அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர். இன்றுவரை, அகழ்வாய்வால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த தொல்பொருள் தடயமும் பைபிளுக்கு வேறுப்பட்டு இல்லை. குறிப்பாக, புதிய ஏற்பாட்டில் லூக்கா எழுதின சுவிசேஷமும், அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகமும் முதல் நூற்றாண்டின் சரித்திரச் செய்திகள் பலவற்றை துல்லியமாக எடுத்துரைக்கிறது. லூக்கா 32 தேசங்களையும், 54 நகரங்களையும், 9 தீவுகளையும் துல்லியமாக கூறியுள்ளார். லூக்காவின் சரித்திர வளமையை இன்று வரை சரித்திரவான்கள் மெச்சி வருகின்றனர். முதல் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியராக அவரைப் புகழ்வோரும் உண்டு.

அது மட்டமல்ல, தவறான சரித்திரச் செய்திகள் பலவற்றோடு போரிட்ட நூலாகவும் பைபிளை எடுத்துக் கொள்ளலாம். மோசேயின் காலத்தில் பைபிளின் முதல் ஐந்து ஆகமங்கள் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை எனவும், அக்கால மத்திய கிழக்குப் பகுதிகளில் எழுத்துமுறை நடைமுறையில் இல்லை எனவும் சரித்திரவான்கள் பல காலமாக கூறி வந்தனர். ஆனால், அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல் ஒன்று இந்த தவறான கூற்றை முற்றிலுமாக அழித்துவிட்டது. ஹமுராபி என்ற பாபிலோனிய அரசர் விதித்த சில சட்டங்கள் இக்கல்லில் காணப்படுகின்றன‌. இது மோசே வாழ்ந்த‌ காலத்தை விட 300 ஆண்டுகள் பழமையானது! எனவே மோசே வாழ்ந்த காலத்தில் எழுத்துமுறை நடைமுறையில் இருந்ததை சரித்திரவான்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு பல சரித்திர கண்டுபிடிப்புகளை உறுதி செய்ய பைபிள் இந்த நாள் வரை அகழ்வாராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. இவைகளைக் குறித்து புதிய பதிவுகளில் ஒவ்வொன்றாக காணலாம்.

2. மூவாயிரம் ஆண்டுகளாய் நிலைத்து நிற்கும் பைபிள்
பைபிள் இயற்றப்பட தொடங்கியது முதல் இந்நாள்வரை 3500 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அக்காலத்தில் அச்சு இயந்திரங்கள் இருந்ததில்லை. கைகளால் தோல்ச்சுருள்களிலும், பாப்பிரஸ் ஓலைகளிலும், துணி, தகடு போன்ற பொருட்களிலும் அதன் செய்திகளை பாதுகாத்து வந்தனர். பழைய பிரதிகள் இத்துப் போய்விட காலங்காலமாக புதிய பிரதிகள் எடுப்ப‌து அவசியமாய் இருந்தது. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை இவ்வாறே பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இது தவிர, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்திய காலங்களில் இருந்தே பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்களை கிரேக்கம், அரமாயிக் போன்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்க முயற்சிகள் மேற்கொண்டனர். இவ்வாறு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு பிரதிகளையும், மொழிப்பெயர்ப்புகளையும் மேற்கொண்டு வந்ததால் பைபிள் காலப்போக்கில் கறைப்பட்டிருக்கும் என கருதுவோர் சிலர் உண்டு. ஆனால், பைபிள் இன்றும் நம்மிடம் இருந்த வண்ணமாகவே வந்துள்ளது.


பழைய ஏற்பாட்டின் மிகப்பழமையான பிரதிகள் சவக்கடல் அருகே உள்ள கும்ரான் குகைகளில் இருந்து 1950களில் கண்டுபிடிக்கப்பட்டன. இது சரித்திரத்தையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். இப்பிரதிகள் இயேசு கிறிஸ்துவிற்கும் முந்நாறு ஆண்டுகள் பழமையானவை! சவக்கடல் சுருள்களை கணக்கில் விட்டால், பழைய ஏற்பாட்டுக்கான பிரதிகள் ஆயிரம் ஆண்டுகால இடைவெளிக்கு பின்பே கிடைக்கின்றன. சவக்கடல் சுருள்களையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்ட பிரதிகளையும் ஒப்பிட்ட போது அவைகள் 99.5% செய்திகள் சிதையாது இருந்தன! மீதமுள்ள 0.5% வேறுபாடுகள் ஒரே சில எழுத்துப் பிழைகளே. கருப்பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை. இது பழைய ஏற்பாடு அற்புதமாக பாதுகாக்கப்பட்டு நம் கரங்களுக்கு வந்ததை உறுதி செய்தது.

புதிய ஏற்பாட்டை கணக்கில் கொண்டால், அது இன்னும் நிலைத்து நிற்கிறது. புதிய ஏற்பாட்டை விட சரித்திரத்தில் பாதுகாக்கப்பட்ட நூல் அக்காலத்தில் எதுவுமே இல்லை. புதிய ஏற்பாடுக்கென அக்காலத்தைச் சார்ந்த ஆயிரமாயிரம் பிரதிகளே இன்றுவரை நம்மிடம் உள்ளன. பிளேட்டொ, அரிஸ்டாட்டில், ஹோமர் ஆகியோரது நூல்களைவிட புதிய ஏற்பாடு எழுதப்பட்ட வண்ணமே நம்மிடம் வந்துள்ளது.

3. இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் பைபிள்
இயேசு கிறிஸ்து பரமேறிச் சென்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டின் நூல்கள் எழுதப்பட்டன. ஏனெனில் அக்காலங்களில் அதற்கான தேவை இருந்தது இல்லை. எருசலேமிலும் இஸ்ரவேலின் பிற பகுதிகளிலும் தான் சீஷர்கள் முதலவதாக போதித்து வந்தனர். இஸ்ரவேல் மக்கள் இயேசுவைக் குறித்து நன்கு அறிந்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய ஒரு நூல் தேவைப்படவில்லை. பின்பு, சீஷர்கள் இஸ்ரவேலரை விட்டு பிற இனத்தவர்களிடம் போதிக்க வந்த‌வுடன், அதற்கான தேவைகள் எழுந்தன. எல்லா இடங்களுக்கும் நினைத்து நேரங்களில் சென்று நற்செய்தியை அறிவிக்க சீஷர்களால் கூடாமற் போயிற்று. எனவே, இயேசு கிறிஸ்துவின் வாழ்வை விளக்கும் சுவிசேஷ புத்தகங்களையும், கிறிஸ்தவ விசுவாசத்தை தெளிவுப்படுத்தும் மடல்களையும் இயற்றி புழக்கத்தில் விட்டனர். அதில் நால்வர் இயேசு கிறிஸ்துவின் தூய வாழ்வை சரித்திர நூல்களாக‌ எழுதிக் கொடுத்தனர். இவைகளை சுவிசேஷங்கள் என்கிறோம், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நூல்களாக அவை அமைந்தன. இந்த நூல்களின் உண்மையை எவ்வாறு அறியலாம்?

உதாரணத்திற்கு, ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு பற்றிய உண்மையை அறிய சரித்திரவான்கள் சில‌ முயற்சிகளை மேற்கொள்ளுவார்கள். அதாவது, அந்த மனிதரைப் பற்றி எந்தெந்த நூல்கள் செய்திகள் கொண்டுள்ளன? அவைகளுள் எச்செய்திகள் எல்லாம் பொதுவாக அமைந்துள்ளன? என ஆராய்ந்து பார்ப்பார்கள். எடுத்துகாட்டாக அசோகரது வாழ்வை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அசோகரது வாழ்வைப் பற்றி 6 நூல்கள் நம்மிடம் உள்ளன என வைத்துக் கொள்வோம். ஐந்து நூல்கள் அவர் பாரதத்தை அரசாண்ட ஒரு மன்னராக எடுத்துரைக்கின்றன. மற்றொரு நூல் அவரை ரோம தேசத்தில் வாழ்ந்த ஒரு ஓவியராக எடுத்துக் கூறுகிறது. இவ்வேளையில் சரித்திரத்தை ஆராய்பவர் அசோகரை மன்னராகவே ஏற்றுக்கொள்வார். அவ்வாறே இயேசு கிறிஸ்துவைப் பற்றி பொதுவானச் செய்திகளைக் கூறும் நான்கு நூல்கள் நம்மிடம் உள்ளன. சுவிசேஷங்கள் கூறும் பொதுவான செய்திகளில் சிலவற்றைக் காணலாம்.

படத்தைப் பெரிதாக்க கிளிக் செய்க‌

நான்கு சுவிசேஷங்களுள் இரண்டு அப்போஸ்தலர்களான மத்தேயுவினாலும், யோவானாலும் எழுதப்பட்டவை. இருவரும் இயேசு கிறிஸ்துவோடு மூன்று ஆண்டுகளாக பயணித்த சீஷர்களாவர். மற்ற இரண்டு நூல்களை எழுதின மாற்கும் லூக்காவும் அப்போஸ்தர்களோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர். நற்சாட்சி பெற்றவர்களால் எழுதப்பட்ட இந்த நான்கு நூல்களையும் ஆதிதிருச்சபை போதித்து வந்தது. இச்சுவிசேஷங்கள் ஒற்றுமையில் மிகுந்திருப்பது மட்டுமின்றி சரித்திரத்தையும் உறுதிப்படுத்தி வருகின்றன.

4. சரித்திரவான்களால் சாட்சி பெற்ற பைபிள்
அற்புதம் பல செய்திட்ட நசரேயனாகிய இயேசு ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டார் எனவும், உயிர்தெழுந்தார் எனவும் பைபிள் சொல்கிறது. இச்செய்தியை அக்கால சரித்திரவான்கள் பலர் தங்கள் நூல்களில் மேற்கோளிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றைக் காணலாம். முதல் நூற்றாண்டைச் சார்ந்த கொர்நலியஸ் தாத்திசு அக்கால சரித்திரவான்களில் பெயர் பெற்ற ஒருவர். வரலாற்று ஆசிரியர்களால் மிகவும் நம்பதக்கவராக கருதப்படுகிறார். "வரலாற்றுக் குறிப்புகள்" என்ற நூலில் அவர் குறிப்பிட்டுள்ள சில வரிகளைக் காணலாம். "தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர்மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள் தாம் கிறெஸ்தவர்கள் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு ஆட்சிக் காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடுநிறைந்த மூடநம்பிக்கை சிறிது காலம் அடக்கிவைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம்தானே". தாத்திசு சிலை வணக்கம் செய்தவர், அக்காலத்தில் கிறிஸ்தவம் மிக வேகமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. அதனால், ஒரு வித வெறுப்பைத் தாத்திசு கொண்டிருந்தார். அவர் தன் வசைமொழிகளால் கிறிஸ்தவ நம்பிக்கைகளை இகழ்ந்து எழுதிய இந்த வரிகளே பைபிளிற்கு புறம்பே இருந்து இயேசுவிற்கு கிட்டும் முக்கிய ஆதாரங்களில் தலைசிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஜோசபஸ்

யூத சரித்திர ஆசிரியரான பிளாவியஸ் ஜோசபஸ் இயேசுவைப் பற்றி யூதமரபு வரலாறு என்ற தனது நூலில் தெரிவித்துள்ளார். "அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்."

இவைகளோடு சுடோனியஸ், பிலைனி, தாலஸ் போன்ற பிற முதல் நூற்றாண்டு சரித்திரவான்களும் இயேசுவைக் குறித்தும் கிறிஸ்தவ வழிபாட்டை குறித்தும் தங்கள் நூல்களில் குறிப்பெழுதி இருக்கின்றனர். யூத சடங்காச்சாரங்கள் அடங்கிய‌ தால்மத்திலும் இயேசு கிறிஸ்துவை இகழ்ந்து சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் சுவிசேஷங்களுக்கு மேன் மேலும் சாட்சிக் கொடுக்கின்றன. அக்காலங்களில், சரித்திரவான்கள் மன்னர்களையும், அரசு அதிகாரிகளையுமே தங்கள் நூல்களில் எழுதி வந்தனர். ஏதோ ஒரு தூர தேசத்தில் கொல்லப்பட்ட ஒரு ஏழை தட்சரைக் குறித்து எழுத வேண்டிய அவசியம் உண்டானதென்ன? ரோமர்கள், கிரேக்கர்கள், யூதர்கள் என பல தேசங்களில் சிதறிக் கிடந்த மக்கள் இயேசுவைப் பற்றி எழுத வேண்டியதேன்? தன் போதனைகளாலும், அற்புத செயல்களினாலும், நற்பெயராலும் மக்கள் மனதில் அவர் இடம் பெற்றிருந்ததே அதன் காரணம். மூன்றே ஆண்டுகளில் இத்தனைப் பெரிய காரியத்தைச் செய்த இயேசு அற்புதமானவரே...

5. சிந்திக்கத் தூண்டும் பைபிள்
பைபிள் நம்பிக்கை வைக்க ஏற்ற நூல். அதினிடையே உள்ள முரண்பாடுகளாக சில வசனங்கள் எடுத்துக் கூறுப்படுகிறது. உண்மையில் முரண்பாடுகளாக எடுத்துக் கூறப்படும் அந்த வசனங்கள் தான் நம்மை மேன் மேலும் நம்பிக்கைக் கொள்ளச் செய்கின்றன. எனவே, இத்தகைய எழுத்து நடைக்காக நாம் கடவுளுக்கு நன்றி தான் செலுத்த வேண்டும். ஒரு சில உதாரணங்களைக் காணலாம். இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவரது சிலுவையின் மேல் சில வசை மொழிகளை எழுதி வைத்தனர். இதை மூன்று சுவிசேஷங்கள் கூறுகின்றன.
மத்தேயு 27:37 இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

மாற்கு 15:26 யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள்.

யோவான் 19:19 அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
இதனை முரண்பாடாக ஏற்றுக் கொள்ளலாமா? அப்படியல்ல. இவை பைபிளின் நம்பகத்தன்மைக்கு இன்னும் சிறப்பு சேர்க்கின்றன. இந்த மூன்று சுவிசேஷங்களை எழுதின ஆசிரியர்கள் வெவ்வேறு நபர்களாக இருப்பதால் அவர்களது எழுத்து நடையில் வேறுபாடு தெரிகிறதே அன்றி வேறல்ல. இருந்தாலும் கருப்பொருளில் எவ்வித வேறுபாடும் இல்லை. இதிலிருந்து இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் சம்பவங்கள் மக்கள் மனதில் அழியாது நிலைபெற்றிருந்ததை அறியலாம். அவரது சிரசின் மேல் வசை மொழிகள் எழுதி வைக்கப்பட்டதை அனைவரும் அக்காலத்தில் அறிந்திருந்தனர் என்பது இதனால் உறுதியாகிறது. ஒரு நூலைப் பிரதி எடுப்பது போல அவர்கள் எழுதவில்லை. தாங்கள் அறிந்த உண்மைகளை, தங்கள் மனமறிந்த படி எளிமையாக எழுதி கொடுத்துள்ளனர்.

இயேசு வெள்ளி ம‌தியம் இறந்து, ஞாயிறு அதிகாலையில் உயிர்தெழுந்தார். இதனை மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன. இயேசு வெள்ளி மதியம் இறந்து ஞாயிறன்று உயிர்ப்பெற்றதால், இடைப்பட்ட காலத்தைச் சரியாக மூன்று நாட்களாக கருதமுடியாது. எனவே இதுவும் ஒரு முரண்பாடாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இதில் எவ்வித தவறும் இல்லை. யூதர் முறைப்படி, வெள்ளி, சனி, ஞாயிறு என்பது மூன்று நாட்களாகவே கருதப்பட்டது. அவர் இக்கிழமைகளைக் கடந்து உயிர்பெற்றதைக் குறிக்கவே மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என சுவிசேசங்கள் கூறுகின்றன. சிறிது சிந்தித்தாலே முரண்களாகத் தோன்றும் இவ்வேறுபாடுகள் எல்லாம் நமக்கு விளங்கும்.

6. பரிசுத்த ஆவி அருளின அற்புத வேதம்!
பரிசுத்த ஆவியின் வரம்பெற்ற 66 நூல்கள் இன்று நம் கைகளில் பைபிளாக வந்துள்ளது. ஆதியாகமம் முதல் மல்கியா வரை உள்ள 39 புத்தகங்களை யூதர்கள் தங்கள் வேதமாக கொண்டிருந்தனர். அவ‌ர்கள் கைவசமிருந்த நூல்களுக்கு இயேசு கிறிஸ்துவே சாட்சிக் கொடுத்தார் (லூக்கா 24:44). இவை பழைய உடன்படிக்கையாக அமைந்தன. பின்பு, அப்போஸ்தலராலும், அவர்கள்தம் கண்காணிப்பிலும் எழுதப்பட்ட நூல்கள் புதிய ஏற்பாடானது. மத்தேயு, யோவான், யூதா, யாக்கோபு, பேதுரு ஆகியோர் இயேசுவின் சீஷர்கள். மாற்கு பேதுருவின் சீஷராகவும், லூக்கா பவுலடியாருடனும் ஊழியஞ் செய்தவர்கள். பவுல் சீஷர்களின் நட்புறைவும், நற்சாட்சியையும் பெற்றவர். இவர்கள் எழுதிய நூல்கள் எல்லாம் ஆதி திருச்சபையின் பயன்பாட்டிற்கு உடனடியாக வந்தன. இவ்வாறு சீஷர்களாலும் அவர்களது சாட்சி பெற்ற மனிதர்களாலும் எழுதப்பட்ட 27 நூல்கள் திருச்சபையால் பாதுகாக்கப்பட்டு புதிய ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனைக் குறித்து தனிக்கட்டுரை ஒன்றில் விரிவாகக் காணலாம்.

பரிசுத்த ஆவியானவரின் கரங்களை பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்களும் அறிவியல் உண்மைகளும் காட்டி கொடுக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வாழ்வை தீர்க்கதரிசிகள் அற்புதமாக முன் கூறினர். அவரது கன்னிப்பிறப்பு முதல் உயிர்தெழுதல் வரை பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களைக் கொண்டே வரையறுக்க முடியும்! அதுமட்டுமன்றி அதில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக இந்நாள் வரை நிறைவேறி வருகின்றன. உதாரணத்திற்கு, இஸ்ரவேலரின் பாஷையை புதிதாக்குவேன் என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார் (செப்பனியா 3:9). இது நமது நாட்களில் நிறைவேறியது மிக மிக ஆச்சரியமான ஒன்று. இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு பிறகு, எபிரேயம் அந்நிய மொழி ஆதிக்கத்தால் இஸ்ரவேல் தேசத்தில் மறைந்து போனது. புழக்கத்தில் இருந்து தவறின ஒரு மொழியாக கருதப்பட்ட எபிரேயம் இன்றைய இஸ்ரவேலின் தேசிய மொழி! ஆயிரமாயிரம் ஜனங்களால் பேசப்படுகின்ற, ஆர்வமோடு கற்றுக் கொள்ளப்படுகின்ற மொழியாக அதிசய உருவமடைந்துள்ளது! எலைசர் யஹுதா என்ற தனி மனிதரின் முயற்சி இறந்து போன ஒரு மொழியை ஆயிரமாண்டுகளுக்கு பிறகு புழக்கத்தில் கொண்டு வந்ததிருக்கிறது. இது போன்ற அதிசய தீர்க்கதரிசனங்கள் நிறைந்த நூல் தான் பரிசுத்த வேதாகமம்.

இத்தனை மகத்துவங்கள் நிறைந்த வேதம் பைபிள். பரிசுத்த ஆவியானவரின் கரம்பதிந்த நூல், தன் தீர்க்கதரிசனங்களாலும், சரித்திரச் செரிவினாலும், சரித்திரவான்களின் சாட்சியாலும், தொல்பொருள் தடயங்களாலும் அனுதினமும் நம்மை ஈர்க்கும் அற்புத நூல். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு கிறிஸ்து வாக்களித்த நித்திய வாழ்வின் சத்தியங்களை எடுத்துரைக்கும் வேதம் இது. அதன் காரணமாகவே நூற்றாண்டுகள் கடந்தும் நம் கையில் நிலைபெற்று இருக்கிறது, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் வளம் வருகிறது, அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு வாசிக்கப்படுகிற வேதமாக இருக்கிறது. இந்த பரிசுத்த வேதத்தை படிக்கவும் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

கடவுளை அறிந்து கொள்ளுங்கள், உங்களுக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட உறவை அறிந்து கொள்ளுங்கள்


கடவுளை எப்படி அறிந்து கொள்ளலாம்? இது இயேசு கிறிஸ்துவை அறியாத நண்பர்க‌ளுக்கான ஒரு பதிவு, இந்நேரமே கடவுளோடு ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள், அவரை அறிந்துகொள்ள இச்செய்தி உங்களுக்கு வழிகாட்டும்.

சரி, கடவுளை அறிந்து அவரோடு அன்பான உறவொன்றை ஏற்படுத்தி கொள்ள என்ன செய்ய வேண்டும்? அனுதினமும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள தியானிக்க வேண்டும், தற்போது நாமிருக்கும் நிலையைக் காட்டிலும் குணந‌லன்களில் சிறக்க வேண்டும், அல்லது வாழ்நாள் முழுவதும் நற்பணிகளை செய்து வாழ வேண்டும்... இவ்வாறு பலர் பல விதமாக கூறுவார்கள். ஆனால் இவை எதுவுமே அதற்கான தீர்வு அல்ல. வாழ்வின் உண்மைப் பொருளை இயேசு நமக்கு விளக்கிச் சொல்லியுள்ளார். கடவுளை அறிந்து கொண்டு, அவரை சொந்தங் கொண்டாட அவர் கூறின வார்த்தைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

1. கடவுள் உங்களை நேசிக்கிறார், உங்கள் வாழ்விற்கு நல்ல திட்டத்தை வைத்திருக்கிறார்.

கடவுள் தான் உங்களை படைத்தவர். அது மட்டுமல்ல, உங்களை அளவிள்ளாமல் நேசிப்பவர். இந்த நேரத்தில் நீங்கள் அவரை அறிந்து கொள்ள விரும்புகிறார், பரலோகத்தில் அவரோடு நீங்களும் நிலைத்து வாழ வேண்டுமென்பது அவரது ஆவலாய் இருக்கிறது. இச்சித்தத்தை தெளியப்படுத்த நம்மிடம் வந்தார் இயேசு. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என தன்னைக் குறித்து இயேசு ஒருமுறை சொன்னார். நாம் கடவுளை அறிய‌, அவரை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நம்மிடத்தில் வந்தவர் இயேசு. அவரே நம் வாழ்விற்கு பொருளையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தைச் சொன்னவர்.

ஏன் நம்மால் கடவுளை கிட்டிச் சேர முடியவில்லை?

2. நாம் அனைவரும் பாவிகள், நமது பாவங்களே நமக்கும் நம்மை படைத்தவருக்கும் பிரிவினை உண்டாக்குகிறது.

இப்பிரிவை நம்மால் மனதார உணர முடியும். நமது வாழ்நாட்களில் பாவங்களைச் செய்து நம்மைச் சீரழித்துக் கொள்கிறோம். நமக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளி நம் பாவச் செயல்களே என்பதில் சந்தேகம் தேவையில்லை. "நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்". நமக்கும் நம்மை படைத்த கர்த்தருக்கும் இடையே உள்ள எல்லா போராட்டங்களும் இப்பாவங்களின் நிமித்தமே. இதற்கு நமது மனசாட்சியே சாட்சிக் கொடுக்கிறது. இருந்தாலும், கர்த்த‌ரை கிட்டிச் சேர நாம் முயற்சி செய்யாமல் இருப்பதில்லை. அவரது மனதை கொள்ளையிட நற்செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தைச் சேர்க்கிறோம். ஆனால் இம்முயற்சி பயனற்றது. எத்தனை புண்ணிய காரியங்களைச் செய்தாலும் நாம் செய்த பாவங்கள் பாவங்களே. பாவங்களை மறைக்க இப்புண்ணிய காரியங்கள் உதவாது.

இப்பாவத்தை எப்படி போக்க முடியும்?

3. இயேசு நம் பாவங்களை போக்கினார், அவரால் நாம் கடவுளை அறியவும், அவருடன் சொந்தங் கொள்ளவும் தகுதி அடைந்திருக்கிறோம்.

நமது பாவங்களுக்கு உரிய தண்டனை உண்டு. "பாவத்தின் சம்பளம் மரணம்" என வேதம் கூறுகிறது. கடவுளோடு நமக்குள்ள உறவு முற்றிலும் துண்டிக்கப்பட வேண்டும், இதுவே நமது பாவங்களுக்குரிய தண்டனை. இச்சாபத்தில் இருந்து நம்மை நீக்க ஒரே வழி தான் உண்டு. நமக்குப் பதிலாக நமது ஆக்கினைத் தீர்ப்பை இன்னொருவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், நமது பாவத்திற்கான இந்த நிவர்த்தியை எந்த மனிதனும் செய்ய முடியாது. ஏனெனில் எல்லா மனிதர்களும் பாவிகளாக இருக்கின்றனர். தன்னிடத்தில் பாவத்தை வைத்துக் கொண்டு தானே தண்டனை பெற ஏதுவாயிருக்க, எந்த மனிதனும் மற்றவரின் தண்டனையை ஏற்க தகுதியற்றவன். எனவே நமக்காக தேவ குமாரன் இயேசு இவ்வுலகில் மனிதனாக வந்தார். முற்றிலும் பாவமில்லாத தூய வாழ்வை நடத்தினார். பொய்குற்றம் சாட்டப்பட்டு, எல்லாரும் கைவிடப்பட்டவராய், சிலுவையில் அறையப்பட்டார். "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" என சத்தமிட்டு தன் ஜீவனையும் நமக்காக விட்டார். அவரது சிலுவை மரணத்தின் போதே நம்மேல் விதிக்கப்பட்ட சாபம் ஒழிந்தது. அதன் அத்தாட்சியாக, சாவை வென்று உயிர்த்தெழுந்து தன் வார்த்தைகளின் உண்மையை காட்டினார்.

அவராலே அன்றி நமக்கு இரட்சிப்பு இல்லை. இதனையே, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்", "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" என பல இடங்களில் வேதம் திட்டமாய்ச் சொல்கிறது. எனவே, நம் பாவங்கள் மன்னிக்கப்பட, கடவுளை அறிந்து அவரைச் சொந்தங் கொள்ள நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதும். இயேசு சொல்கிறார், "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்". உங்கள் மேல் அன்பு கொண்டு உங்களுக்காக மரித்தவர் இயேசு. இவ்வேளையில் அவர் உங்களை அழைத்திருக்கிறார். கடவுளோடு நித்திய உறவு கொள்ள, இயேசு கிறிஸ்து உங்களுக்காக செய்த எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து, மனப்பூரவமாக விசுவாசியுங்கள்.

நீங்கள் கிறிஸ்துவின் அழைப்பை ஏற்றுக் கொள்வீர்களா?


4. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுதல்.

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" என வேதம் கூறுகிறது. நாம் நமது விசுவாசத்தினால் இயேசுவானவரை ஏற்று கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது என்றால் என்ன? அவரே தேவ குமாரன், என் பாவங்களை சுமந்து தீர்த்தவர் என விசுவாசித்து, நமது வாழ்வை அவரது கரங்களில் அர்ப்பணிக்க வேண்டும். இவ்வேளையில் இயேசு உங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அவர் உங்களுக்கு விடுத்த அழைப்பின் வரிகள் இங்கே, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்".

நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்கத் தயாரா? இயேசுவுக்கென்று உங்களை ஒப்புக் கொடுக்க, நேர்த்தியான வார்த்தைகளோ, சடங்காச்சாரங்களோ முக்கியமல்ல. அவர் உங்கள் உள்ளத்தையே பார்க்கிறார். உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட அறியாவிட்டால், கீழுள்ள சிறு ஜெபத்தை சொல்லி பிராத்தியுங்கள்.
"இயேசுவே, நான் உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன், என் வாழ்வில் வாரும். எனக்கு இரட்சிப்புண்டாக சிலுவையில் மரித்தீரே, அதற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். உம் ஒருவராலேயே என் பாவங்களை நீக்கி என் வாழ்வை புதிதாக்க முடியும். என்னை மன்னித்து, எனக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இவ்வேளையில் என் வாழ்வை உம் கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். உம் சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றும். ஆமென்."
அவரை நீங்கள் மனப்பூர்வமாக, உண்மையாக இவ்வேளையில் அழைத்திருந்தால், அவர் சொன்னபடியே உங்கள் வாழ்வில் இப்போது பிரவேசித்து இருக்கிறார். கடவுளோடு ஒரு தனிப்பட்ட அன்பான உறவை இவ்வேளையில் நீங்கள் தொடங்கிவிட்டீர்கள். உங்கள் பாவமெல்லாம் அழிந்தது. புதிதான வாழ்வை தொடங்க ஆயத்தமாயிருக்கிறீர்கள், இனி, அன்றாட வேதம் வாசித்து, ஜெபித்து, கர்த்தரை அறிந்து அவருக்குள் வளருங்கள். ஊழியத்திலும், விசுவாச சபை கூடுதல்களிலும் தவறாமல் பங்கு பெறுங்கள்.

வேதம் உங்களிடம் இல்லாவிட்டால், இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

(கிறிஸ்து அறிமுகப்பதிவு 1)

Thursday, 13 February 2014

இன்றைய பாடல்: லேசான காரியம் - DOWNLOAD


"என்னைப் பெலப்படுத்துகிற
கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும்
செய்ய எனக்குப் பெலனுண்டு"
- பிலிப்பியர் 4:13

TO DOWNLOAD THIS SONG

லேசான காரியம்
எதுவும் லேசான காரியம்
பெலன் உள்ளவன்
பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது
லேசான காரியம்
உமக்கது லேசான காரியம்...

மண்ணைப் பிசைந்து மனிதனை
படைப்பது லேசான காரியம்
மண்ணான மனிதர்க்கும்
மன்னாவைத் தருவது
லேசான காரியம்
உமக்கது லேசான காரியம்...

கூழாங்கல்லாலே
கோலியாத் வீழ்ந்தது
லேசான காரியம்
ஆழ்கடல் மீனதில்
வரிப்பணம் பெறுவதும்
லேசான காரியம்
உமக்கது லேசான காரியம்...

கற்பாறை போல‌
கடல்மேல் நடப்பது
லேசான காரியம்
கற்ஜாடி நீரை
கனிரசம் ஆக்குவது
லேசான காரியம்...
உமக்கது லேசான காரியம்...

Wednesday, 12 February 2014

இன்றைய பாடல்: குயவனே குயவனே (DOWNLOAD MP3)


"இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா,
நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்,
நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை"
- ஏசாயா 64:8


குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே...

குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே...

வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே

வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே...

குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே...

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றினேன்
கண்டேன் இல்லை இன்பமே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றினேன்
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்ரமென்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே...

குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே...

குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே...

Tuesday, 11 February 2014

இன்றைய பாடல்: தாசரே இத்தரணியை (DOWNLOAD MP3)

  
வேதப்பகுதி - மத்தேயு 28:18-20
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவை கூறுவோம்
அவரை காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை
வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்
உயிர்த்த இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை
சுமந்து தீர்த்தாரே

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

பசியுற்றார்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து
தம்மை மறந்து இயேசு கனிந்து
பிரிந்தனரே

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள்
விழுந்தனரே

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

மார்க்கம் தப்பி நடப்போரை
சத்திய வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம்
நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம்
நாம் ஜெயித்திடுவோம்

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவை கூறுவோம்
அவரை காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

Monday, 10 February 2014

What a friend we have in Jesus - DOWNLOAD MP3


TO DOWNLOAD THIS SONG,

What a friend we have in Jesus,
All our sins and griefs to bear!
What a privilege to carry
Everything to God in prayer!
Oh, what peace we often forfeit,
Oh, what needless pain we bear,
All because we do not carry
Everything to God in prayer!

Have we trials and temptations?
Is there trouble anywhere?
We should never be discouraged—
Take it to the Lord in prayer.
Can we find a friend so faithful,
Who will all our sorrows share?
Jesus knows our every weakness;
Take it to the Lord in prayer.

Are we weak and heavy-laden,
Cumbered with a load of care?
Precious Savior, still our refuge—
Take it to the Lord in prayer.
Do thy friends despise, forsake thee?
Take it to the Lord in prayer!
In His arms He’ll take and shield thee,
Thou wilt find a solace there.

Blessed Savior, Thou hast promised
Thou wilt all our burdens bear;
May we ever, Lord, be bringing
All to Thee in earnest prayer.
Soon in glory bright, unclouded,
There will be no need for prayer—
Rapture, praise, and endless worship
Will be our sweet portion there.

தேவ கிருபை என்றுமுள்ளதே


இப்பாடலை டவுன்லோடு செய்ய, 
இங்கு கிளிக் செய்யவும்

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரில் அவர் என் பாதையில் ஒளியாய்
காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
அவரைப் போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

வேதப்பகுதி: சங்கீதம் 136

1. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

2. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

3. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

4. ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

5. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

6. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

7. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

8. பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

9. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

10. எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

11. அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

12. பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

13. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

14. அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

15. பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

16. தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

17. பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

18. பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

19. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

20. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

21. அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

22. அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

23. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

24. நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலை பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

25. மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

26. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.